கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணைக்கு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் காவிரி வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டிய வனப்பகுதியில் மான் வேட்டையாடியதாகக் கூறி, அந்தோணிசாமி, ஜான்ரோஸ் பீட்டர், குமார் ஆகிய 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அரசியல் கட்சிகளிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததுடன், சிபிஐ விசாரணை உள்ளிட்ட சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட கண்டனத்தில், கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்தார். மனித உயிர்களுக்கு எந்த மதிப்பும் அளிக்காமல் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், குற்றம் செய்தவர்களை பாதுகாக்கும் முயற்சிகள் நடைபெறாமல், சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்து வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
பாமக தலைவர் அன்புமணி, சுட்டுக் கொல்லப்பட்ட 3 பேரும் எந்த சட்டவிரோத செயலிலும் ஈடுபடாத நிலையில் வனத்துறையினர் அவர்களை சுட்டுக் கொன்றதாக குற்றம்சாட்டினார். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். மேலும், சம்பவம் தொடர்பாக கர்நாடக அரசுக்கு தமிழக முதல்வர் விஜய் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், தங்களது நடவடிக்கையை மறைப்பதற்காக உயிரிழந்தவர்கள் மான் வேட்டையாடியதாக வனத்துறையினர் குற்றம்சாட்டுவதாக கூறினார். துப்பாக்கிச்சூடு சம்பவத்தை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகளை பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், 3 தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என தெரிவித்தார். சம்பந்தப்பட்ட வனத்துறையினரை பணிநீக்கம் செய்து கைது செய்வதுடன், கொலைக் குற்றமாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன், கர்நாடகாவில் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார். தமிழக அரசு உடனடியாக கர்நாடக அரசிடம் இது தொடர்பாக கடுமையாகப் பேசி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அதிகபட்ச நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சம்பவம் குறித்து கர்நாடக அரசிடம் உரிய விளக்கம் கேட்க வேண்டும் என்றும், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். சுதந்திரமான, வெளிப்படையான விசாரணை மூலம் சம்பவத்தின் முழு உண்மையும் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.



