ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ தீவிர விசாரணை: சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் கே.ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கத் தொடங்கி ஒரு வாரம் நிறைவடைந்துள்ள நிலையில், அதிகாரிகள் முதற்கட்ட விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, சென்னை பெரம்பூரில் உள்ள வேணுகோபால் தெருவில் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவ இடத்துக்கு சிபிஐ அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
டிஐஜி ரகுராம ராஜன் தலைமையிலான 3 அதிகாரிகள் கொண்ட குழுவினர், ஆர்ம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டபோது அவர் கட்டிக் கொண்டிருந்த வீட்டைப் பார்வையிட்டனர். மேலும், கொலைச் சம்பவம் எவ்வாறு நடைபெற்றது என்பதை அறியும் வகையில், சம்பவத்துடன் தொடர்புடைய நிகழ்வுகளை காட்சிகளாக மறுஉருவாக்கம் செய்து அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர். சம்பவம் நடைபெற்ற விதம் மற்றும் அடுத்தடுத்த நிகழ்வுகள் குறித்து அவர்கள் விரிவாகப் பதிவு செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த ஆய்வின்போது, ஆர்ம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட 2024-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி செம்பியம் காவல் நிலைய ஆய்வாளராகவும், அந்த வழக்கின் முந்தைய விசாரணை அதிகாரியாகவும் பணியாற்றிய சிரஞ்சீவியும் உடனிருந்தார். ஆர்ம்ஸ்ட்ராங்கின் சகோதரரும், கொலைச் சம்பவத்தை நேரில் பார்த்ததாகக் கூறப்படும் சாட்சியுமான வீரமணி அளித்த புகாரின் அடிப்படையில் செம்பியம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட அசல் முதல் தகவல் அறிக்கையை சிபிஐ தற்போது மீண்டும் பதிவு செய்துள்ளது.
சென்னை சிபிஐ சிறப்புப் பிரிவு இந்த வழக்கில் அதிகாரப்பூர்வ விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், சம்பவ இட ஆய்வு முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது. கொலை நடைபெற்ற விதம், சம்பவ இடத்தில் நடந்த நிகழ்வுகள் மற்றும் ஏற்கெனவே சேகரிக்கப்பட்ட ஆதாரங்களுடன் தற்போதைய விசாரணையில் கிடைக்கும் தகவல்களை ஒப்பிட்டு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இதனுடன், சென்னை காவல்துறை தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகையையும் நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை காவல் ஆணையர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
பின்னர், காவல்துறை தரப்பில் அந்த மனு திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து வழக்கை கையில் எடுத்துள்ள சிபிஐ அதிகாரிகள், ஏற்கெனவே நடைபெற்ற விசாரணை மற்றும் கிடைத்துள்ள ஆதாரங்களை மறுஆய்வு செய்வதுடன், புதிய கோணங்களிலும் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.



