24 பெட்டிகளுடன் புதிய ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் தயாரிப்பு விரைவில் தொடக்கம்: ஐசிஎஃப்
சென்னை பெரம்பூர் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) 24 பெட்டிகளைக் கொண்ட புதிய ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஐசிஎஃப் பொதுமேலாளர் மணீஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், புதிய ரயிலுக்கான வடிவமைப்பு தயாராக இருப்பதாகவும், விரைவில் உற்பத்திப் பணிகள் தொடங்கும் என்றும் குறிப்பிட்டார்.
கடந்த நிதியாண்டில் சென்னை ஐசிஎஃப் ஆலையில் மொத்தம் 3,405 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக மணீஷ் அகர்வால் தெரிவித்தார். முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது இது 13.2 சதவீதம் அதிக உற்பத்தியாகும் என்றும் அவர் கூறினார். இதேபோல், ஐசிஎஃப் ஆலையில் தயாரிக்கப்பட்ட பயணிகள் ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளதும் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போது 16 பெட்டிகளைக் கொண்டு தூங்கும் வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு 24 பெட்டிகளைக் கொண்ட புதிய ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயிலை தயாரிக்க ஐசிஎஃப் திட்டமிட்டுள்ளது. இதற்கான வடிவமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதால், அடுத்த கட்டமாக உற்பத்திப் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
மேலும், குறைந்த கட்டணத்தில் வசதியான ரயில் பயணத்தை வழங்கும் வகையில் புதிய அம்ரித் பாரத் ரயில்களையும் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஐசிஎஃப் பொதுமேலாளர் தெரிவித்தார். இந்த ரயில்களில் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள், பொது வகுப்பு பெட்டிகள் மற்றும் தூங்கும் வசதியுடன் கூடிய பெட்டிகள் இடம்பெறும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.



