“உரிமைப் போராட்ட வரலாற்றுக்கு ஸ்டிக்கர் அடிக்காதீர்”: முதல்வர் விஜய்க்கு கனிமொழி சோமு கண்டனம்
திமுக, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பெயர்களை குறிப்பிடுவதில் முதல்வர் விஜய்க்கு பாதுகாப்பற்ற உணர்வு உள்ளதா என திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான வரலாற்று நடவடிக்கைகளில் திமுக அரசுகளின் பங்களிப்பை மறைக்க முயற்சிக்கக் கூடாது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் கனிமொழி என்.வி.என்.சோமு வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 1970-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்தை மாநிலப் பாடலாக அறிவித்து அரசாணை வெளியிட்டவர் அப்போதைய முதல்வர் கருணாநிதி என தெரிவித்துள்ளார். தொடர்ந்து, 1970-ம் ஆண்டு நவம்பர் 23-ம் தேதி அனைத்து அரசு விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட வேண்டும் என்றும் அரசாணை வெளியிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இந்த அங்கீகாரத்தை திமுக அரசு வழங்கியது என்பதை குறிப்பிடாமல், 1970-களில் இது கொண்டுவரப்பட்டது என பொதுவாக கூறி செல்வது, திமுக ஆட்சியின் சாதனைகள் மீது தற்போதைய அரசுக்கு இருக்கும் காழ்ப்புணர்வை வெளிப்படுத்துவதாக கனிமொழி சோமு குற்றம்சாட்டியுள்ளார். திமுக அரசின் பங்களிப்பை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளக்கூட முடியாத நிலை இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், 2021-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி தமிழ்த்தாய் வாழ்த்தை மாநிலப் பாடலாக அங்கீகரித்து, அனைத்து அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளிலும் அதனை முதலில் பாட வேண்டும் என அரசாணை பிறப்பித்தவர் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றும் கனிமொழி சோமு தெரிவித்துள்ளார்.
தமிழை உயிர்மூச்சாக கருதுவதாக பேசும் முதல்வர் விஜய், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடம் வழங்கும் வகையில் சுற்றறிக்கை வெளியிட்ட ஆளுநரையும், ஆளுநரின் அறிவுறுத்தல்களை மட்டுமே பின்பற்றுவோம் என கூறிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நிர்வாகிகளையும் ஏன் கண்டிக்கவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழை போற்றும் வகையில் ‘தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் பவர்’ என கூறுவதற்குக்கூட ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்துவது வேடிக்கையாக இருப்பதாகவும் கனிமொழி சோமு விமர்சித்துள்ளார். தற்போது கொண்டுவரப்பட்டுள்ள தனித் தீர்மானத்தை முந்தைய சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே கொண்டு வந்திருக்கலாமே என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியதாக கூறப்படுவது போன்று, தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றுக்கும் புதிய அடையாளத்தை ஒட்ட முயற்சிக்கக் கூடாது என கனிமொழி சோமு தெரிவித்துள்ளார். ஆயிரம் கரங்கள் மறைத்தாலும் ஆதவன் மறையாது என்ற கருத்தையும் தனது பதிவின் இறுதியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.



