செங்கல்பட்டு, விழுப்புரத்தில் ஆக.18-ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் வரும் ஆகஸ்டு 18-ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதையின் காரணமாக மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்டு 17-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதர தமிழகப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ஆகஸ்டு 18-ம் தேதி செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும், ஆகஸ்டு 19-ம் தேதி நீலகிரி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். இந்த இரு நாட்களிலும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழையும், பிற பகுதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 4 செ.மீ. மழை பெய்துள்ளது. இளையான்குடி, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், கறம்பக்குடி, நீலகிரி மாவட்டம் வூட் பிரையர் எஸ்டேட், செருமுள்ளி மற்றும் பந்தலூர் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



