80வது சுதந்திர தின விழா: சென்னையில் தேசியக் கொடியேற்றி முதல்வர் விஜய் உரை; ஊழல் ஒழிப்புக்கு உறுதி
நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் விஜய் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். காவல் வாகனங்கள் புடைசூழ கோட்டைக்கு வந்த அவரை தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து முப்படை உயர் அதிகாரிகளை முதல்வர் விஜய்க்கு தலைமைச் செயலர் அறிமுகம் செய்து வைத்தார்.
இதையடுத்து முதல்வர் விஜய்க்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அணிவகுப்பை பார்வையிட்ட முதல்வர், சுதந்திர தின விழாவில் பங்கேற்க வந்த சபாநாயகர், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு கைகூப்பி வரவேற்பு தெரிவித்தார். பின்னர் கோட்டை கொத்தளத்துக்குச் சென்ற அவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
விழாவில் முதல்வர் விஜய்யின் தாய் சோபனா, தந்தை சந்திரசேகர், நடிகை த்ரிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் சிறப்புரையாற்றினார். அப்போது, நாட்டின் சுதந்திரத்துக்காக உயிர், உடைமை மற்றும் வாழ்க்கையை இழந்த சுதந்திரப் போராட்ட தியாகிகள் அனைவருக்கும், பிரபலமானவர்கள் முதல் பெயர் தெரியாதவர்கள் வரை வீர வணக்கம் செலுத்துவதாக தெரிவித்தார்.
மக்கள் தாங்கள் அடிமைப்பட்டுள்ளோம் என்ற எண்ணத்துடன் ஒன்றிணையும் போது சாதி, மதம், மொழி, இனம் உள்ளிட்ட வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை உருவாகும் என முதல்வர் விஜய் குறிப்பிட்டார். இவ்வாறு அனைத்து வேறுபாடுகளும் உடைந்து நொறுங்கும் நிலையில்தான் உண்மையான சுதந்திரம் கிடைக்கும் என்றும், மகாத்மா காந்தி தலைமையில் 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
சுதந்திரத்தைப் பாதுகாத்து நாடு படிப்படியாக முன்னேறி வரும் நிலையில், இந்த முன்னேற்றத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது அனைவரின் கடமை என்றும் முதல்வர் கூறினார். தமிழ்நாட்டை லஞ்சம் மற்றும் ஊழலில் இருந்து பாதுகாப்பதும் விடுதலைக்கு இணையான ஒன்று என்றும், அந்த நோக்கத்திலேயே தமது அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
386 ஆண்டுகள் பழமையான புனித ஜார்ஜ் கோட்டையில் 80வது சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றவும், மக்கள் மத்தியில் உரையாற்றவும் வாய்ப்பு வழங்கியதற்காக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும், ஜென்சி இளம் சிங்கப்படை தோழர்களுக்கும் முதல்வர் விஜய் நன்றி தெரிவித்தார்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, லஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத நிர்வாகம், போதைப்பொருள் கலாச்சாரத்துக்கு எதிரான நடவடிக்கைகள், பெண்கள் பாதுகாப்பு, சமூக நீதி மற்றும் வெளிப்படையான நிர்வாகம் ஆகியவற்றை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பொதுவாழ்க்கையில் சமரசத்துக்கு இடமளிக்கக் கூடாது என்றும், மக்கள் நலனே முதன்மையானது என்றும் முதல்வர் விஜய் வலியுறுத்தினார். மக்கள் நலத் திட்டங்களில் மத்திய அரசுடன் நிர்வாக ரீதியாக ஒத்துழைப்பு தொடரும் என்றும், அதே நேரத்தில் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரான மத்திய அரசின் முடிவுகளை தமது அரசு தொடர்ந்து எதிர்க்கும் என்றும் அவர் கூறினார்.
முந்தைய ஆட்சிக் காலங்களில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார். குறிப்பாக அம்மா உணவகத் திட்டம் மேலும் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். இந்த விரிவாக்கம் வரும் செப்டம்பர் 17-ம் தேதி பெரியார் பிறந்த நாளில் தொடங்கப்படும் என்றும் முதல்வர் விஜய் தனது உரையில் தெரிவித்தார்.



