திண்டுக்கல் அருகே மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆசிரியர் மீது தாக்குதல்: தவெக பிரமுகர் கைது
திண்டுக்கல் அருகே மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அரசு பள்ளி ஆசிரியர் மீது மதுபோதையில் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணக்கெடுப்பு விவரங்களை கேட்டதற்கு ஏற்பட்ட தகராறில், ஆசிரியர் தாக்கப்பட்டதுடன் அவரது செல்போனும் பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகன் என்பவரை கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே நாடுகண்டனூர் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ஜெயலட்சுமி (40), லட்சுமணபுரம் கிராமத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பாலமுருகன் (37) என்பவரது வீட்டுக்குச் சென்று கணக்கெடுப்புக்குத் தேவையான தகவல்களை கேட்டுள்ளார். இதற்கு பாலமுருகன் எதிர்ப்பு தெரிவித்து, தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அரசு உத்தரவின் அடிப்படையிலேயே கணக்கெடுப்புப் பணிக்கு வந்துள்ளதாக ஜெயலட்சுமி விளக்கி, தனது அடையாள அட்டையையும் காண்பித்துள்ளார். இருப்பினும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் பாலமுருகன், அவரது விளக்கத்தை ஏற்காமல் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் திடீரென ஆசிரியர் ஜெயலட்சுமியின் செல்போனை பறித்ததுடன், அவரது முகத்தில் சரமாரியாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் ஜெயலட்சுமியின் முகத்தில் ரத்தக் காயமும், முதுகில் உள்காயமும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தைத் தொடர்ந்து அவர் உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸார் விசாரணை
சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததும் திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தார். கைது நடவடிக்கையின்போதும், தான் தவெகவைச் சேர்ந்தவர் என்றும், தன்னையே போலீஸார் கைது செய்வதாகவும் கூறி அவர் தகராறில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, பாலமுருகன் தவெக கட்சியில் நிர்வாகப் பொறுப்பில் உள்ளாரா என்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகிகளிடம் கேட்டபோது, அவர் கட்சியில் எந்த நிர்வாகப் பொறுப்பிலும் இல்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆசிரியர் சங்கம் கண்டனம்
ஆசிரியர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பாக பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்களுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கணக்கெடுப்பின்போது உண்மையான தகவல்களை வழங்கினால் ரேஷன் பொருட்கள் கிடைக்காது அல்லது ரூ.1,000 உரிமைத்தொகை நிறுத்தப்பட்டுவிடும் என்ற அச்சம் சிலரிடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே, கணக்கெடுப்பு தொடர்பான சந்தேகங்களை பொதுமக்களிடம் தெளிவுபடுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், தாக்குதல் நடத்தியவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஆசிரியர்கள் அச்சமின்றி களப்பணியில் ஈடுபடுவதற்கு தேவையான பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.



