போதைப்பொருள் புழக்கமே தமிழக சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு முக்கிய காரணம்: பழனிசாமி
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, தற்போது போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு இதுவே முக்கிய காரணமாக இருப்பதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போதைப்பொருள் நடமாட்டத்தை அரசு இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
கோவையில் கல்லூரி மாணவர் சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் துயரமானது என்று குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். மாணவர் கொலை சம்பவத்தில் அரசு முழு கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை திருப்திகரமாக இல்லை என்றும், கடந்த சில ஆண்டுகளை விட தற்போது போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்தும் அவர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக போராடி வருவதாகவும், மேகேதாட்டு அணை விவகாரத்தில் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். அதே நேரத்தில், தற்போதைய ஆட்சியின் குறுகிய காலத்திலேயே அரிசி விலை கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.20 வரை உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேகேதாட்டு விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தையும், டெல்டா விவசாயிகளின் கூட்டத்தையும் நடத்தி சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். மேகேதாட்டுவில் அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாதிக்கப்படுவதுடன், சேலம் உள்ளிட்ட 20 மாவட்டங்களுக்கு குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
காவிரி நீர் தொடர்பான விவகாரத்திலும் தமிழக அரசு தாமதமாக செயல்பட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். ஜூன் மாதத்திலேயே காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்க வேண்டும் என்றும், ஆனால் ஆகஸ்ட் மாதத்தில்தான் அரசு வழக்கு தொடர்ந்ததாகவும் அவர் கூறினார். இதனால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பா சாகுபடிக்கும் வாய்ப்பு குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
டெல்டா பகுதியில் நிலத்தடி நீரை நம்பி சுமார் 2 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்ததாகவும், தண்ணீர் இல்லாததால் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்தார்.
தொடர்ந்து, தவெக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்தும் அவர் விமர்சனம் செய்தார். கட்சி தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும், அதன் தலைவர் மக்களின் பிரச்சினைகளுக்காக நேரடியாக போராட்டங்களில் ஈடுபட்டாரா என்று கேள்வி எழுப்பினார். மேலும், தவெக அரசின் 100 நாள் ஆட்சி “ரீல்ஸ் ஆட்சி” போல இருப்பதாகவும், தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
தொழில் முதலீட்டு மாநாடு தொடர்பாகவும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். ஏற்கனவே அதிமுக மற்றும் திமுக ஆட்சிக் காலங்களில் தமிழகத்தில் முதலீடு செய்த நிறுவனங்கள், தற்போது தங்களது திட்டங்களை விரிவுபடுத்தியிருப்பதாகவும், இதனை புதிய முதலீடுகளாகக் காட்ட முடியாது என்றும் அவர் கூறினார். பெரிய அளவிலான புதிய முதலீடுகள் வந்ததாகத் தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.
இதனிடையே, 11 நிறுவனங்களின் மதுபானங்களுக்கு டாஸ்மாக்கில் தடை விதிக்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, தனக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது என்றும், அதனால் அது தொடர்பாக தனக்கு தெரியாது என்றும் கூறினார். பேட்டியின்போது அதிமுக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.



