மல்லிகார்ஜுன கார்கேவை இழிவுபடுத்தியதாக பாஜகவுக்கு வைத்திலிங்கம் கடும் கண்டனம்
பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதற்காகவே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பாஜகவினர் வேண்டும் என்றே இழிவுபடுத்தும் வகையில் செயல்பட்டுள்ளதாக புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வைத்திலிங்கம் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக மாநிலம் யாதகிரி கல்வார்டு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றதாக குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கிருந்து சென்ற பின்னர், அப்பகுதியைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் குழுவாகச் சென்று அந்த இடத்தை சுத்தம் செய்து, புனிதப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
சாதி மற்றும் இனத்தை அடிப்படையாகக் கொண்டு வேண்டும் என்றே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாக வைத்திலிங்கம் குற்றம்சாட்டினார். குறிப்பாக பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த தலைவர் என்பதால் அவரை இழிவுபடுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய செயல் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இது மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஏற்பட்ட அவமதிப்பாக மட்டும் பார்க்க முடியாது என்றும், ஒட்டுமொத்த பட்டியலின சமூக மக்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான சம்பவம் என்றும் வைத்திலிங்கம் கூறினார். காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவராகவும், நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய எதிர்க்கட்சியின் தலைவராகவும் பல்வேறு பொறுப்புகளில் இருக்கும் ஒருவருக்கே இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது மிகவும் மோசமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவத்தில் யார் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைத்திலிங்கம் வலியுறுத்தினார். இதுதொடர்பாக புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் கட்சியினர், தங்களது பகுதிகளுக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பாஜகவினர் மீது புகார் அளிக்க உள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.



