கர்நாடகாவில் குட்கா தடை உத்தரவை 24 மணி நேரத்தில் திரும்பப் பெற வேண்டும்: பாஜக எம்.பி. எச்சரிக்கை
கர்நாடக மாநிலத்தில் குட்கா பொருட்களின் விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை 24 மணி நேரத்துக்குள் மாநில அரசு திரும்பப் பெற வேண்டும் என்று ஷிவ்மோகா மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினரும், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகனுமான பி.ஒய்.ராகவேந்திரா கெடு விதித்துள்ளார். இல்லையெனில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக போராட்டத்தில் ஈடுபடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் அண்மையில் வெளியிட்ட உத்தரவில், மாநில மக்களின் நலனை கருத்தில் கொண்டு குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகையிலை மற்றும் நிகோடின் கலந்த குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கு ஓராண்டு காலத்துக்கு இந்தத் தடை அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை உற்பத்தி செய்தல், பதுக்கி வைத்தல், விநியோகம் செய்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்தவொரு பெயரில் சந்தையில் விற்பனை செய்யப்பட்டாலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்.பி. பி.ஒய்.ராகவேந்திரா, மாநில அரசின் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். குட்கா விற்பனை மீதான தடையை அடுத்த 24 மணி நேரத்துக்குள் அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், இல்லையெனில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக போராட்டத்தை தொடங்கும் என்றும் அவர் கூறினார்.
இந்தத் தடை உத்தரவு கர்நாடகத்தில் பாக்கு சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை பெரிதும் பாதிக்கும் என ராகவேந்திரா தெரிவித்தார். அரசு பிறப்பித்த தடை உத்தரவு அமலுக்கு வந்த ஒரே நாளிலேயே சந்தையில் பாக்கு விலை குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், குட்கா மீதான தடை உத்தரவு உண்மையில் மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு பிறப்பிக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்றும் அவர் விமர்சித்தார். மக்களின் ஆரோக்கியத்தில் அரசுக்கு உண்மையான அக்கறை இருந்தால், சிகரெட் மற்றும் மதுபான விற்பனைக்கும் தடை விதித்திருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் அரசு மாநிலத்தில் மதுபான விற்பனைக்கான உரிமங்களை அதிகரித்து வருவதுடன், மதுபானக் கடைகளின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளதாக ராகவேந்திரா குற்றம்சாட்டினார். எனவே, ஆட்சியாளர்கள் மதுபான விற்பனைக்கு தடை விதிக்க தயாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.



