தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்
அவையின் மூத்த உறுப்பினர் என்ற மரியாதையைக்கூட கருத்தில் கொள்ளாமல், சட்டமன்ற உறுப்பினர் போஜராஜன் மீது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைத்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற விமர்சனங்கள் அவரது அரசியல் வளர்ப்பின் தன்மையை வெளிப்படுத்துவதாகவும், குறுகிய காலத்தில் பல கட்சிகளுக்கு மாறியதால் ஏற்பட்ட பழக்கம்போல் இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நயினார் நாகேந்திரன், நாடாளுமன்றத்தில் இன்னும் முன்மொழியப்படாத தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக அவசரமாக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வருவது மடைமாற்று அரசியல் என தெரிவித்துள்ளார். அந்தத் தீர்மானத்துக்கு எதிராக பாஜக சட்டமன்ற உறுப்பினர் போஜராஜன் வாக்களித்ததற்காக அவரை “ஒற்றைப் பிரதிநிதித்துவம்” என கேலி செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்றும் அவர் கூறியுள்ளார்.
அவையின் மூத்த உறுப்பினர் என்ற அடிப்படை மரியாதைகூட இல்லாமல் போஜராஜன் மீது தரம் தாழ்ந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள நயினார் நாகேந்திரன், அரசியல் நடப்புகளையும் அவை ஒழுக்கத்தையும் முறையாக கற்றுக்கொண்ட பின்னரே சட்டமன்றத்துக்கு வர வேண்டும் என ஆதவ் அர்ஜுனாவுக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும், ஆதாரமற்ற வகையில் எதையும் பேசாமல் அரசியல் நடைமுறைகளை புரிந்து கொண்டு கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 39-ல் இருந்து 59 ஆக அதிகரிக்கும் வகையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால், தமிழகத்தின் எம்பிக்கள் எண்ணிக்கை குறைந்துவிடும் என கூறுவது அறியாமையின் வெளிப்பாடு என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்த பின்னரும் தமிழகத்தின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்காது என கூறுவதும் புரிதலின்மையை காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் பிரதிநிதித்துவம் 7.23 சதவீதமாக அதிகரித்து, 59 மக்களவை உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், முன்பைவிட எளிதாக தமிழக மக்களின் கருத்துகளை நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு அமைச்சருக்கு இதுபோன்ற அடிப்படை விஷயங்கள் கூட புரியவில்லை என்பது வருத்தமளிப்பதாகவும் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
மேலும், தனது 20 நிமிட உரையில் இந்தி பேசும் மாநிலங்களுக்கும், அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கும் மட்டுமே தொகுதி மறுவரையறையால் பலன் கிடைக்கும் என்பது போன்ற கருத்துகளை ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளதாக நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசு முன்மொழிந்துள்ள தொகுதி மறுவரையறையின்படி மக்கள் தொகை அல்லது மொழி வேறுபாடின்றி அனைவருக்கும் 50 சதவீத உயர்வு கிடைக்கும் என்பதால், யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது 4 மாவட்டங்களில் பரந்து விரிந்த தொகுதிகளையும், ஒரு மாநிலத்தைவிட அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட தொகுதிகளையும் மக்களவை உறுப்பினர்கள் நிர்வகித்து வருவதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். தொகுதி மறுவரையறை மூலம் இதுபோன்ற குறைகளை நீக்கி, தமிழக மக்களின் பிரச்சினைகளை எளிதாகத் தீர்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், தமிழக அரசு வலியுறுத்தும் ‘Freeze delimitation’ கொள்கை தமிழக மக்களின் குரலை ஒட்டுமொத்தமாக முடக்குவதற்கே வழிவகுக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை என்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.



