நீட் வினாத்தாள் கசிவு போராட்டம்: மாணவர்கள் மீதான காவல்துறை நடவடிக்கைக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தல்
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மாணவர்கள் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பையும் அவர் கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.
‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் ராகுல் காந்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது காவல்துறை சார்பில் முட்கள் பதிக்கப்பட்ட லத்திகள் மற்றும் பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட பல மாணவர்களுக்கு எலும்பு முறிவு, வெட்டுக் காயம் மற்றும் சிராய்ப்புகள் ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பிஹாரின் சியான் நகரில் நடைபெற்ற போராட்டத்தின்போதும் பல போராட்டக்காரர்கள் காயமடைந்ததாக ராகுல் காந்தி கூறியுள்ளார். ஏ.கே-47 உள்ளிட்ட துப்பாக்கிகளால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய நடவடிக்கைகளை உயர் அதிகாரிகளின் அனுமதியின்றி காவல்துறை மேற்கொண்டிருக்க வாய்ப்பில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். போராட்டம் நடைபெற்ற இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த டெல்லி காவல்துறை மற்றும் விரைவு அதிரடிப் படை ஆகியவை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுபவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாணவர்கள் மீதான நடவடிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சரின் அனுமதி இருந்திருக்கலாம் அல்லது அவருக்கு சம்பவம் குறித்து தெரியாமல் இருந்திருக்கலாம் என இரண்டு சாத்தியக்கூறுகளை ராகுல் காந்தி முன்வைத்துள்ளார். அனுமதி வழங்கியிருந்தால் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும், தெரியாமல் இருந்திருந்தால் அது நிர்வாகத் திறமையின்மையை காட்டுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
எந்த சூழ்நிலையாக இருந்தாலும், உள்துறை அமைச்சராக சம்பவத்துக்கு பொறுப்பேற்று பதவி விலகியிருக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி தனது கட்டுரையில் வலியுறுத்தியுள்ளார். மேலும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இளைஞர்களுக்கு ஆதரவாக நிற்கும் என்றும், இளைஞர்களுக்கு எதிராக இதுபோன்ற வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



