எஃப்சிஆர்ஏ திருத்த மசோதாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே திரும்பப்பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின்
சிறுபான்மையினரின் உரிமைகளை கருத்தில் கொண்டு, எஃப்சிஆர்ஏ (FCRA) திருத்த மசோதாவை மத்திய அரசு தற்போதைய நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே திரும்பப்பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், இந்தியாவின் பல்வேறு மதப் பிரிவுகளைச் சேர்ந்த முக்கிய மதத் தலைவர்கள் இடம்பெற்றுள்ள, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் தலைமையிலான சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கைக் குழு மன்றத்தின் பிரதிநிதிகள், ஆகஸ்ட் 6, 2026 அன்று ஒன்றிய உள்துறை அமைச்சரை சந்தித்ததாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2026 மார்ச் மாதத்தில் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட எஃப்சிஆர்ஏ திருத்தச் சட்ட முன்வரைவு 2026-ஐ திரும்பப் பெற வேண்டும் என்றும், எஃப்சிஆர்ஏ சட்டத்தின் பிரிவு 15-ஐ நீக்க வேண்டும் என்றும் பிரதிநிதிகள் உள்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளனர். மாற்றாக, இந்தச் சட்ட முன்வரைவையும், வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம், 2010-ன் செயல்பாடுகள் குறித்த விரிவான ஆய்வையும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்மொழியப்பட்டுள்ள சட்ட முன்வரைவால் ஏற்படக்கூடிய தீவிரமான விளைவுகளை கருத்தில் கொண்டு, அதன் விதிகளுக்கு தொடக்கம் முதலே திமுக எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். சிறுபான்மையினரின் உரிமைகளை கருத்தில் கொண்டு, மன்றத்தின் கோரிக்கையை ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும், தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரிலேயே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.



