‘முதல்வர் விஜய் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பங்கேற்காது’ – கனிமொழி விளக்கம்
தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழக அரசு இன்று கூட்டியுள்ள அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்தாய்வுக் கூட்டத்தில் திமுக பங்கேற்காது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மேகேதாட்டு அணை விவகாரத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் நோக்கிலேயே அவசரமாக இந்தக் கூட்டம் நடத்தப்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய ஆபத்தை முதன்முதலில் எடுத்துரைத்து எச்சரித்தவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி, தமிழகத்தின் கோரிக்கைகளை தீர்மானங்களாக நிறைவேற்றியதுடன், பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் கட்சித் தலைவர்களை சென்னைக்கு அழைத்து நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தையும் நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என்ற முழக்கத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஒரே அணியில் திரட்டியதாகவும் கனிமொழி கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் இது தொடர்பான சட்ட முன்வரைவை பாஜக கொண்டு வந்தபோதும், சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்கு இடையிலும் அதற்கு எதிராக திமுக போராடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கருஞ்சட்டை அணிந்து, கருப்புக் கொடி ஏற்றி, சட்ட வரைவின் நகலை எரித்து எதிர்ப்பு தெரிவித்ததுடன், நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறாமல் தடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை தொடர்பான சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றப்போவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்றும் கனிமொழி கூறியுள்ளார். திருத்தப்பட்ட சட்ட முன்வடிவு குறித்த தகவலும் இதுவரை வெளியாகாத நிலையில், புதிதாக விவாதிப்பதற்கு எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் நிலைப்பாடு ஏற்கெனவே நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்பட வேண்டும் என்றும், இந்த நடைமுறை 2026-ம் ஆண்டிலிருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என ஒன்றிய அரசு உறுதி அளிக்க வேண்டும் என்றும் தமிழகத்தின் கோரிக்கை உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில், 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தற்போது இரு அவைகளிலும் மாநிலங்களுக்கு இடையே எந்த விகிதத்தில் தொகுதிகள் உள்ளனவோ, அதே விகிதத்தில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையும் உயர்த்தப்பட வேண்டும் என்றும் கனிமொழி கூறியுள்ளார். தொகுதி மறுவரையறை காரணமாக நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் தற்போதைய 7.18 சதவீத பிரதிநிதித்துவம் எந்த காரணத்தைக் கொண்டும் குறைக்கப்படக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறைக்கு தமிழகம் எதிரானது அல்ல என்றும், கடந்த 50 ஆண்டுகளாக சமூக மற்றும் பொருளாதார நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்கான தண்டனையாக அது அமைந்துவிடக்கூடாது என்பதே தமிழகத்தின் நிலைப்பாடு என்றும் கனிமொழி குறிப்பிட்டுள்ளார். இந்த நிலைப்பாட்டில் திமுக தொடர்ந்து உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய தேசிய முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்று தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றியுள்ள நிலையில், தற்போது மீண்டும் இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்த வேண்டிய அவசியம் என்ன என்றும் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே, காவிரி பிரச்சினையை முன்வைத்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருவதாகவும், மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும் என பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், இந்தக் கோரிக்கை தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும், யாரும் கேட்காத நிலையில் தொகுதி மறுவரையறை குறித்து அவசரமாக கூட்டம் நடத்துவது காவிரி பிரச்சினையில் இருந்து மக்களை திசைதிருப்பும் அரசியல் நாடகம் என்றும் கனிமொழி விமர்சித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை கலந்தாய்வுக் கூட்டத்தில் திமுக பங்கேற்க வேண்டுமெனில், அதற்கு முன்பாக தமிழகத்தின் முக்கிய பிரச்சினையான மேகேதாட்டு அணை தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற நிபந்தனையை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஏற்கெனவே தெரிவித்துள்ளதாகவும் கனிமொழி குறிப்பிட்டுள்ளார். எனவே, தமிழக அரசியல் கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையை ஏற்காத தமிழக அரசின் இன்றைய கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தின் காவிரி உரிமை மற்றும் டெல்டா விவசாயிகள் மீது தமிழக அரசுக்கு உண்மையான அக்கறை இருந்தால், மேகேதாட்டு அணைக்கு எதிராக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சென்று ஒன்றிய ஜல் சக்தி அமைச்சரிடம் நேரில் வழங்க தமிழக அரசின் பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும் என்றும் கனிமொழி வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசின் சார்பில் பிரதிநிதிகளை அனுப்ப முதல்வர் விஜய் தயாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.



