ரூ.832 கோடியில் ‘அண்ணன் சீர்’ திட்டத்தை செயல்படுத்த முடியாது: சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ ரகுபதி விமர்சனம்
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொது விவாதத்தின் போது, ‘அண்ணன் சீர்’ திட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து திமுக எம்எல்ஏ ரகுபதி கேள்வி எழுப்பினார். ரூ.832 கோடி ஒதுக்கீட்டில் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது என்றும், இதற்கான நிதி போதாது என்றும் அவர் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் பேசிய ரகுபதி, நிதிநிலை அறிக்கையில் மக்களின் வரிப்பணத்தை முறையாக பயன்படுத்துவோம் என்று அரசு தெரிவித்துள்ளதை குறிப்பிட்டார். மேலும், ‘வெற்றி 150 நாள் திட்டம்’ மூலம் மத்திய அரசிடம் தமிழக அரசு சரணடைந்து விட்டதாக விமர்சித்த அவர், தேர்தலில் அமைதியாக வந்ததைப் போலவே தற்போது மத்திய அரசின் முன்பும் அமைதியாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.
நிதியமைச்சர் ஜெபமாலையுடன் வந்து பட்ஜெட் தாக்கல் செய்ததாகவும், வேளாண்மை அமைச்சர் திருப்பதி சென்று வழிபாடு செய்துவிட்டு லட்டு மற்றும் புளியோதரையுடன் வந்து பட்ஜெட் தாக்கல் செய்ததாகவும் ரகுபதி குறிப்பிட்டார். அண்ணாவின் கொள்கையான “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்ற வழியில் திமுக செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தமிழக அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை சுட்டிக்காட்டிய ரகுபதி, மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், விடியல் பயணத் திட்டம் போன்ற திட்டங்களில் திமுக அரசு மக்களுடன் இருப்பதாக கூறினார். ‘விடியல்’ என்ற வார்த்தை பிடிக்காததால் சில திட்டங்களில் இருந்து அது நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
‘அண்ணன் சீர்’ திட்டம் தொடர்பாக பேசிய அவர், ரூ.832 கோடி நிதியில் அந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது என்றார். இந்த திட்டத்தின் கீழ் 2 முதல் 3 லட்சம் பெண்கள் பயன்பெறுவார்கள் எனக் கூறிய அவர், தற்போதைய தங்கம் மற்றும் பொருட்களின் விலை உயர்வை கணக்கில் எடுத்தால் கூடுதல் நிதி தேவைப்படும் என தெரிவித்தார்.
ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், புடவை உள்ளிட்ட பொருட்களின் விலையையும் சேர்த்து கணக்கிட்டால், ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான உதவியை ரூ.1 லட்சமாக குறைத்தாலும் கூட திட்டத்தை செயல்படுத்த ரூ.2 ஆயிரம் கோடி வரை தேவைப்படும் என ரகுபதி கூறினார்.
மேலும், 200 யூனிட் இலவச மின்சாரம், மின் கட்டண உயர்வு மற்றும் மகளிருக்கு ரூ.2,500 உதவித்தொகை வழங்கும் வாக்குறுதி உள்ளிட்ட விவகாரங்களையும் அவர் எழுப்பினார். மின்சார வசதி மற்றும் அரசு உதவித் திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளதாகவும் ரகுபதி தெரிவித்தார்.



