பெரிய கனவுகளுடன் 2047-க்குள் வளர்ந்த நாடாக இந்தியா மாற வேண்டும்: பிரதமர் மோடி உறுதி
நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். சுதந்திர தினத்தின் வரலாற்றுச் சிறப்பை எடுத்துரைத்த அவர், நாட்டின் விடுதலைக்காகப் போராடிய மகாத்மா காந்தி உள்ளிட்ட அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் புரட்சியாளர்களுக்கும் அஞ்சலி செலுத்தினார். ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் மூவர்ணக் கொடி இடம்பெற்றிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
சுதந்திரத்துக்குப் பிறகு செங்கோட்டைக் கொத்தளத்தில் இருந்து வந்தே மாதரம் பாடல் எதிரொலிக்கும் இந்த தருணம் வரலாற்றுச் சிறப்புமிக்கது என பிரதமர் தெரிவித்தார். புதிய தீர்மானங்களுடன் இந்தியா உற்சாகமாக முன்னேறி வருவதாகவும், 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்பதே நாட்டின் மிகப்பெரிய இலக்கு என்றும் அவர் கூறினார். உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு வளர்ந்த நாடாக வேண்டும் என உறுதி மேற்கொள்வது இந்தியாவின் துணிச்சலை வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 12 ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சியையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். பாதுகாப்புத் துறை உற்பத்தி நான்கு மடங்காகவும், கதர் மற்றும் கிராமத் தொழில்துறை உற்பத்தி ஐந்து மடங்காகவும், மின்னணு சாதன உற்பத்தி ஏழு மடங்காகவும் உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார். அலைபேசி உற்பத்தி மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.
“சிறிய கனவுகள் இனி போதாது; நாம் பெரிய கனவுகளைக் காண வேண்டும்” என்று வலியுறுத்திய பிரதமர், பெரிய கனவுகள் சிந்தனையை விரிவுபடுத்தி தொலைநோக்குப் பார்வையை அகலமாக்கும் என்றார். இலக்கை அடைவதற்கான உறுதி அசைக்க முடியாததாக இருக்க வேண்டும் என்றும், உறுதியான மனநிலை இருந்தால் சவால்கள் மற்றும் பேரிடர்களுக்கு மத்தியிலும் முன்னேறுவதற்கான புதிய வழிகளை உருவாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
சுதந்திரத்தின் நூற்றாண்டான 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே நாட்டின் தொலைநோக்குப் பார்வை என பிரதமர் கூறினார். 140 கோடி மக்களின் கூட்டு முயற்சி மற்றும் அயராத உழைப்பின் மூலம் இந்த இலக்கை அடைய முடியும் என்றும், கடந்த 12 ஆண்டுகளில் எண்ணற்ற மக்கள் தங்களது அர்ப்பணிப்புடன் நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டுள்ளதாகவும் அவர் பாராட்டினார்.
எரிசக்தி பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் பிரதமர் தனது உரையில் வலியுறுத்தினார். 2047-க்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி உற்பத்தித் திறனை அடைய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், நடப்பு தசாப்தத்தில் ஐந்து புதிய அணுமின் உலைகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சுதந்திரம் பெற்றபோது இந்தியா பல கனவுகளைக் கொண்டிருந்தாலும், போதிய வேகம் மற்றும் உத்வேகத்துடன் முன்னேற முடியவில்லை என பிரதமர் குறிப்பிட்டார். “நடக்கும், நடந்துவிடும், பார்த்துக்கொள்ளலாம்” என்ற மனப்பான்மை நாட்டின் வளர்ச்சியை தாமதப்படுத்தியதாகவும், ஒரு காலத்தில் உலகின் பலவீனமான நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்றிருந்த போதிலும், கடந்த 12 ஆண்டுகளில் நாடு புதிய உத்வேகத்துடன் வேகமாக முன்னேறி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார். குழாய் வழி குடிநீர் இணைப்புகள் முன்பைவிட அதிக வேகத்தில் வழங்கப்பட்டுள்ளதாகவும், சமையல் எரிவாயு இணைப்புகள், ஏழைகளுக்கான கழிப்பறைகள் மற்றும் பின்தங்கிய மக்களுக்கான வீடுகள் கட்டும் பணிகளும் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நிர்வாகத் துறையிலும் மிகப்பெரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். ஆயிரக்கணக்கான விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் நீக்கப்பட்டதுடன், காலாவதியான நூற்றுக்கணக்கான சட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மெட்ரோ ரயில் வலைப்பின்னல்கள் விரிவுபடுத்தப்பட்டு, பொதுப் போக்குவரத்து கட்டமைப்பும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
குழாய் வழி எரிவாயு வசதி 12 ஆண்டுகளுக்கு முன்பு 70 நகரங்களில் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 700 நகரங்களுக்கு விரிவடைந்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார். நாடு முழுவதும் 1.75 கோடி குடும்பங்கள் குழாய் வழி எரிவாயு இணைப்பைப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
சுயசார்பு இந்தியா என்பது நாட்டின் முக்கிய இலக்குகளில் ஒன்று என்றும் பிரதமர் வலியுறுத்தினார். இந்தியா இனி பிற நாடுகளைச் சார்ந்திருக்காமல் தனது சொந்த திறன்களை வளர்த்துக்கொண்டு தேசிய நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்றார். ‘மேக் இன் இந்தியா’, ‘சுதேசி’ மற்றும் உள்ளூர் பொருட்களுக்கு முன்னுரிமை போன்ற முயற்சிகளுடன் ஒவ்வொரு இந்தியரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
செமிகண்டக்டர் துறையில் இந்தியா சுயசார்பை நோக்கி முன்னேறி வருவதாக பிரதமர் தெரிவித்தார். மின்னணு சாதனங்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளுக்கு சிப்கள் இன்றியமையாதவை எனக் குறிப்பிட்ட அவர், நாட்டில் ஏற்கெனவே மூன்று பெரிய செமிகண்டக்டர் ஆலைகள் நிறுவப்பட்டுள்ளதாகவும், அவற்றில் ஏற்றுமதிக்கான உற்பத்தி தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். அடுத்த 7 முதல் 8 ஆண்டுகளில் மேலும் 5 முதல் 8 ஆலைகள் செயல்பாட்டுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.
கோவிட் தொற்றுக்குப் பின்னர் உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட போர்களால் உலகளவில் பதற்றமான சூழல் நிலவியதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். அந்த காலகட்டத்தில் தடுப்பூசிகள், பெட்ரோல், டீசல் மற்றும் உரங்கள் கிடைக்காது என சிலர் அச்சத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் விமர்சித்தார்.
இந்தியா கச்சா எண்ணெயைச் சார்ந்திருக்கும் நிலையை மாற்றுவதற்காக கடல்சார் வளங்களை ஆராய்வதில் கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் தெரிவித்தார். முன்பு கடலோரப் பகுதிகளில் 99 சதவீதம் ‘அணுகக்கூடாத பகுதிகள்’ என வகைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது அவற்றை ஆய்வு மற்றும் செயல்பாடுகளுக்கு உகந்த பகுதிகளாக மாற்றியுள்ளதாக அவர் கூறினார். ஆழ்கடல் ஆய்வு மற்றும் புதிய இயற்கை வளங்களை கண்டறியும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட ‘சமுத்ரா மந்தன்’ முயற்சியின் தொடர்ச்சியாக, இந்தப் பணிகளை விரைவுபடுத்த அண்மையில் ரூ.85,000 கோடி நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.
இந்தியா நிலையான அரசியல் ஆணை, நிலையான அரசு, வலுவான ஜனநாயகம், வலிமையான நீதித்துறை மற்றும் வழிகாட்டும் அரசியலமைப்பைக் கொண்ட நாடாக விளங்குவதாக பிரதமர் தெரிவித்தார். அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்கள் இந்தியாவுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகவும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இந்த வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் கேட்டுக்கொண்டார்.



