திருப்பதி ஏழுமலையான் தரிசன முன்பதிவில் மோசடி: 259 போலி இணையதளங்கள் மீது நடவடிக்கை
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பெயரில் போலி இணையதளங்கள், வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களை உருவாக்கி பக்தர்களிடம் மோசடி நடைபெற்று வருவதாக தேவஸ்தானம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ரவி நேற்று வெளியிட்ட அறிக்கையில், பக்தர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் தரிசனம், தங்கும் விடுதிகள் மற்றும் ஆர்ஜித சேவைகளுக்கான முன்பதிவு என்ற பெயரில் பல போலி இணையதளங்கள் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளங்கள் மட்டுமின்றி, திருப்பதி தேவஸ்தானத்தின் பெயரை பயன்படுத்தி வாட்ஸ்அப் மற்றும் பல்வேறு சமூக வலைதளங்களிலும் போலியான தகவல்கள் பகிரப்பட்டு பக்தர்கள் ஏமாற்றப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
எனவே, தரிசனம், ஆர்ஜித சேவைகள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கான முன்பதிவுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேவஸ்தானத்தின் பெயர், சின்னம் அல்லது சமூக வலைதள அடையாளங்களை போலியாக பயன்படுத்தி செயல்படுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை தேவஸ்தானத்தின் பெயரில் செயல்பட்ட 259 போலி இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பக்தர்கள் தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலியை பயன்படுத்தி தேவையான சேவைகளைப் பெறலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என்றும், முன்பின் அறிமுகமில்லாத நபர்களின் பேச்சை நம்பி பணம் அனுப்ப வேண்டாம் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் மீண்டும் கேட்டுக்கொண்டுள்ளது.



