சுப்ரியா சுலே மகள் திருமண வரவேற்பில் மோடி உற்சாகம்: காங்கிரஸ் தலைவர்களுடன் கலகலப்பு
தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) எம்.பி. சுப்ரியா சுலேவின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று மணமக்களை வாழ்த்தியதுடன், காங்கிரஸ் மூத்த தலைவர்களுடனும் உற்சாகமாக உரையாடினார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளன.
மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் சரத் பவாரின் மகளான சுப்ரியா சுலேவின் மகள் ரேவதி சுலேவும், நாக்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் சாரங் லகானியும் திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து, அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி டெல்லியில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. கட்சி வேறுபாடுகளை கடந்து பல்வேறு அரசியல் தலைவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். திருமண வரவேற்பு மேடையில் நின்றிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருடன் பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் உரையாடினார். அரசியல் ரீதியாக வெவ்வேறு அணிகளில் இருக்கும் தலைவர்கள் ஒரே இடத்தில் நட்புடன் உரையாடிய காட்சிகள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.
திருமண நிகழ்ச்சியின்போது பிரியங்கா காந்தியை பார்த்த பிரதமர் மோடி, “பிரியங்கா, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பிரியங்கா காந்தி, “நான் நலமாக இருக்கிறேன். நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?” என்று பதிலளித்தார். அதற்கு பிரதமர் மோடி, “நான் அப்படியேதான் இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
அப்போது அருகில் இருந்த காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை பார்த்து, “நீங்கள் அப்படியே இல்லை. சிறிது மாறி இருக்கிறீர்கள்” என்று கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. இதைக் கேட்ட பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் பதிலளித்ததுடன், கார்கேவின் தோளில் கையைப் போட்டு கையொலி எழுப்பி உற்சாகப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்த ராகுல் காந்தியும் சிரித்தபடி அவர்களுடன் உரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசியல் விவகாரங்களில் கடுமையாக விவாதித்து வரும் சூழலில், அதற்கு மாறாக அவைக்கு வெளியே நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள் மகிழ்ச்சியுடன் கலந்துரையாடியிருப்பது அரசியல் நாகரிகத்துக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் பிற அரசியல் பிரமுகர்கள் ஒன்றாக மகிழ்ச்சியுடன் உரையாடும் இந்த காட்சிகள் தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் தலைவர்கள் இயல்பாக பழகும் இந்த தருணங்கள் இணையத்தில் வரவேற்பையும் பெற்றுள்ளன.



