மழலையர் பள்ளி தொடங்குவதாக கூறி ஐ.டி. பெண்ணிடம் ரூ.8.53 லட்சம், நகைகள் மோசடி: தம்பதி கைது
சென்னையில் மழலையர் பள்ளி தொடங்க இருப்பதாகக் கூறி, தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றும் பெண்ணிடம் ரூ.8.53 லட்சம் மற்றும் தங்க நகைகளை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக கணவன், மனைவி இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை ஆதம்பாக்கம், நியூ என்.ஜி.ஓ. காலனி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திவ்யா (31) என்பவர் தனியாக வசித்து வருகிறார். தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர், கடந்த ஆண்டு ஆலந்தூர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் ‘ஹெர்பல் லைப் நியூட்ரிஷன்’ மையத்துக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
அப்போது அங்கு சிகிச்சை பெற வந்த கற்பகம் (38) என்பவருடன் திவ்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் நட்புடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் கற்பகமும் அவரது கணவர் சதீஷ்குமாரும் (41), ஆலந்தூர் பகுதியில் மழலையர் பள்ளி ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளதாக திவ்யாவிடம் தெரிவித்துள்ளனர்.
பள்ளி தொடங்குவதற்காக பணம் தேவைப்படுவதாகவும், தங்களிடம் கொடுக்கும் பணத்தை 3 மாதங்களில் திருப்பி வழங்கிவிடுவதாகவும் கற்பகமும், சதீஷ்குமாரும் தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய திவ்யா, பல்வேறு தவணைகளில் வங்கி பணப்பரிவர்த்தனை மற்றும் கிரெடிட் கார்டு மூலம் கற்பகத்திடம் மொத்தம் ரூ.8 லட்சத்து 53 ஆயிரம் வழங்கியுள்ளார்.
மேலும், சுமார் 38 பவுன் தங்க நகைகளையும் திவ்யா அவர்களிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே திவ்யாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதால், தான் வழங்கிய பணம் மற்றும் நகைகளை திரும்ப தருமாறு கற்பகத்திடம் கேட்டுள்ளார். அப்போது கற்பகம் சுமார் 20 பவுன் நகைகளை மட்டும் திருப்பி கொடுத்ததாக தெரிகிறது.
மீதமுள்ள தங்க நகைகள் மற்றும் பணத்தை திருப்பி வழங்காமல் கற்பகமும் அவரது கணவர் சதீஷ்குமாரும் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த திவ்யா, தனது பணம் மற்றும் நகைகளை மீட்டுத் தரக்கோரி புனித தோமையர்மலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திவ்யா அளித்த புகாரில் குறிப்பிடப்பட்ட தகவல்கள் உண்மை என தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து, இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய பழவந்தாங்கல் இளங்கோவடிகள் தெருவைச் சேர்ந்த கற்பகம் (38) மற்றும் அவரது கணவர் சதீஷ்குமார் (41) ஆகிய இருவரையும் போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.



