சென்னை மெரினாவில் நேபாள இளைஞர் மர்ம மரணம்; கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு
சென்னை மெரினா கடற்கரையில் நேபாளத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதுடன், கொலையாளிகளை கண்டறிந்து கைது செய்ய தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரையில் அண்ணா சதுக்கம் பின்புறம் உள்ள கல்லுக்குட்டை பகுதியில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பதாக பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அண்ணா சதுக்கம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அங்கு ரத்தக் காயங்களுடன் கிடந்த இளைஞரின் சடலத்தை போலீஸார் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர் உயிரிழந்து கிடந்த இடத்தில் இருந்த மதுபாட்டில்கள், செல்போன் மற்றும் கைப்பை உள்ளிட்ட பொருள்களையும் போலீஸார் கைப்பற்றி விசாரணைக்கு உட்படுத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் நேபாளத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் சகா (27) என்பது தெரியவந்துள்ளது. இவர் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் தங்கி, அங்குள்ள ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வந்ததாகவும் போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஸ்ரீராம் சகாவின் உடலில் பல்வேறு ரத்தக் காயங்கள் காணப்பட்டதால், அவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். நண்பர்களுடன் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் அவர் தாக்கப்பட்டாரா அல்லது மெரினா பகுதியில் சுற்றித்திரிந்த மர்ம நபர்கள் அவரை தாக்கி கொலை செய்தார்களா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கண்டறியும் வகையில் போலீஸார் அப்பகுதியில் கிடைக்கும் தகவல்கள் மற்றும் தடயங்களை சேகரித்து வருகின்றனர். கொலைக்கான காரணம் மற்றும் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.



