மன்னார்குடியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை: 10 பேர் கைது; காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக 10 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். மேலும், சட்டவிரோத லாட்டரி விற்பனையைத் தடுக்கத் தவறியதாக கூறி மன்னார்குடி நகர காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட சட்டவிரோத லாட்டரி விற்பனையை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீஸார் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மன்னார்குடி நகர காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெற்று வருவதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் மன்னார்குடி நகர் பகுதியில் போலீஸார் சோதனை மேற்கொண்டபோது, சட்டவிரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக புதூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன், மன்னார்குடி மேலவாசல் பகுதியைச் சேர்ந்த பரமசிவம், குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி மற்றும் கார்த்திகேயன், நெடுவாக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அருளானந்தம், ருக்மணி, குளம் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன், சசி, அன்புக்கரசு, சுரேஷ் ஆகிய 10 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டு மடிக்கணினிகள், ஒரு ஐபோன், 12 ஆண்ட்ராய்டு செல்போன்கள், நான்கு ஆட்டோக்கள், நான்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் ரூ.63 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் சட்டவிரோத லாட்டரி விற்பனை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, மன்னார்குடி பகுதியில் சட்டவிரோத லாட்டரி விற்பனையைத் தடுக்கத் தவறியதாக கூறி, மன்னார்குடி நகர காவல் ஆய்வாளர் ராஜ் கமலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தஞ்சை சரக டிஐஜி ஜியா உல்ஹக் நேற்று இரவு உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவர்களை விரைந்து கைது செய்த தனிப்படை போலீஸாரின் நடவடிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் வெகுவாகப் பாராட்டினார்.



