சென்னை வண்ணாரப்பேட்டையில் ரூ.10 ஆயிரம் கூலி பாக்கி தகராறு: கொத்தனார் கொலை, மேஸ்திரி கைது
சென்னை வண்ணாரப்பேட்டையில் ரூ.10 ஆயிரம் கூலி பாக்கி தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கொத்தனார் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டிடப் பணியின்போது மேலிருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக முதலில் கூறப்பட்ட நிலையில், போலீஸார் நடத்திய விசாரணையில் தாக்குதல் நடத்தப்பட்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து மேஸ்திரியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
வண்ணாரப்பேட்டை நல்லப்ப வாத்தியார் தெருவில் வெங்கடாசலம் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் புதிய வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கோட்டீஸ்வரன் (46) என்பவர் மேஸ்திரியாகவும், கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகரைச் சேர்ந்த ஜெயக்கொடி (55) என்பவர் கொத்தனாராகவும் வேலை செய்து வந்தனர்.
ஜெயக்கொடிக்கு கோட்டீஸ்வரன் ரூ.10 ஆயிரம் கூலி பாக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அந்தத் தொகையை கேட்பதற்காக ஜெயக்கொடி நேற்று கட்டிட வேலை நடைபெறும் இடத்துக்குச் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கூலி பாக்கி தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த கோட்டீஸ்வரன், அங்கு கிடந்த ரீப்பர் கட்டையால் ஜெயக்கோடியை தாக்கியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தத் தாக்குதலில் தலையில் பலத்த காயம் அடைந்த ஜெயக்கொடி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருடன் வேலை பார்த்த தட்சிணாமூர்த்தி என்பவர் ஜெயக்கோடியை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு ஜெயக்கோடியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மருத்துவமனையில் இருந்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் கட்டிடப் பணியின்போது மேலிருந்து தவறி விழுந்ததால் ஜெயக்கொடி உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து வண்ணாரப்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், கூலி பாக்கியை கேட்கச் சென்றபோது ஜெயக்கொடிக்கும் கோட்டீஸ்வரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதும், அதில் கோட்டீஸ்வரன் ரீப்பர் கட்டையால் தாக்கியதில் ஜெயக்கொடி மயங்கி விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து கோட்டீஸ்வரனை போலீஸார் கைது செய்து, சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரூ.10 ஆயிரம் கூலி பாக்கி தொடர்பான தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



