வண்ணாரப்பேட்டையில் ரவுடி வெட்டிக் கொலை: தப்பியோடிய 4 பேர் கொண்ட கும்பலுக்கு வலை
சென்னை வண்ணாரப்பேட்டையில் ரவுடி ஒருவரை 4 பேர் கொண்ட மர்மக் கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓட்டேரி எஸ்விஎம் நகரைச் சேர்ந்த 20 வயதான ரவுடி அஜய், நேற்று முன்தினம் இரவு தனது கூட்டாளியான காஜலை அவரது வீட்டில் விட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். பழைய வண்ணாரப்பேட்டை ராமதாஸ் நகர் அருகே அவர் சென்று கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது.
அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட மர்மக் கும்பல், அஜய்யை வழிமறித்துத் தங்களது கையில் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தாக்குதலை நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
தகவலறிந்து வந்த வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் அஜய்யின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.



