விரைவில் பணக்காரனாக ஆசை: சென்னையில் நகைக்கடை மற்றும் ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற அசாம் இளைஞர் கைது
சென்னை கொளத்தூர் பகுதியில் அடுத்தடுத்து நடந்த நகைக்கடைத் திருட்டு மற்றும் ஏடிஎம் கொள்ளை முயற்சி சம்பவங்களில் தொடர்புடைய அசாம் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். விரைவில் பணக்காரனாக வேண்டும் என்ற பேராசையினால் இந்தத் தொடர் திருட்டுச் சம்பவங்களில் அவர் ஈடுபட்டதாகக் காவல் துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை எருக்கஞ்சேரியைச் சேர்ந்த குமரன் என்பவர், கொளத்தூர் வேலவன் நகரில் பழைய தங்க நகைகளை வாங்கும் கடை நடத்தி வருகிறார். கடந்த 17-ம் தேதி இரவு வழக்கம்போல் கடையைப் பூட்டிவிட்டுச் சென்ற அவர், மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே கல்லாப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பணம், தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் உள்ளிட்டப் பொருட்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் நடந்த அடுத்த நாளான 18-ம் தேதி அதிகாலை, கொளத்தூர் பாரதி நகரில் உள்ள ஒரு வங்கி ஏடிஎம் மையத்திற்குள் புகுந்த நபர், இரும்பு கம்பியால் ஏடிஎம் இயந்திரத்தின் பணப்பெட்டியை உடைக்க முயன்றுள்ளார். ஆனால், நீண்ட நேரம் முயன்றும் பணப்பெட்டியை உடைக்க முடியாததால், ஆத்திரத்தில் அங்குள்ள மின்காந்த பூட்டு மற்றும் கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட சாதனங்களைச் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
அடுத்தடுத்து நடந்த இந்த இரு சம்பவங்கள் குறித்து கொளத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். சம்பவ இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, இரு கொள்ளை முயற்சிகளிலும் ஈடுபட்டது ஒரே நபர் என்பது உறுதியானது. இதையடுத்து நடத்தப்பட்ட தீவிரத் தேடுதலில், கொளத்தூர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பீம் பகதூர் சேத்ரி (27) என்பவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.



