மின் கட்டணக் குளறுபடிகளுக்குத் தீர்வு காணாவிட்டால் பாஜக போராட்டம்: நயினார் நாகேந்திரன்
தமிழக மக்களைப் பாதிக்கும் மின் கட்டணக் குளறுபடிகளுக்குத் தமிழக அரசு உடனடித் தீர்வு காண வேண்டும் என்றும், தவறுகளை உடனடியாகச் சீரமைக்கத் தவறினால் பாஜக சார்பில் பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்துத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மின்சார வாரியத்தின் மீட்டர் கணக்கீடு மற்றும் பில்லிங் குளறுபடிகளால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்குத் தவறான கட்டணங்கள் அனுப்பப்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் மக்கள் செய்வதறியாது பெரும் தவிப்பிற்கு ஆளாகியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின் கணக்கீட்டில் பெரும் குளறுபடிகள் நடந்திருப்பதை மின்வாரியத் தலைமைப் பொறியாளரே ஒப்புக்கொண்டிருப்பது முதல்வர் விஜய் அரசின் நிர்வாகத் தோல்வியைக் காட்டுகிறது என்று தெரிவித்த நயினார் நாகேந்திரன், இமாலயக் கட்டணப் பிரச்சினையில் முதல்வர் தனிக் கவனம் செலுத்திப் போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், தவறாக வசூலிக்கப்பட்ட கூடுதல் தொகையை மின்வாரியம் உடனடியாகத் திருப்பித் தர வேண்டும் என்றும், கட்டணக் குளறுபடிகளுக்கு நிரந்தரத் தீர்வு காணச் சிறப்புத் தணிக்கையை அரசு தொடங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.



