“காவிரி விவகாரத்தில் தவெக அரசு சொல்வதையும் கேட்பதில்லை; சுயமாகவும் சிந்திப்பதில்லை”
காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக மக்களின் நலனுக்காக உரிய நடவடிக்கைகளை தவெக அரசு மேற்கொள்ளவில்லை என்றும், பிறர் கூறுவதையும் கேட்பதில்லை, சுயமாகவும் சிந்திப்பதில்லை என்றும் அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி விமர்சித்தார். கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசின் பல்வேறு செயல்பாடுகள் குறித்தும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
மேகேதாட்டு அணை விவகாரத்தில் மெத்தனமாக செயல்படுவதாகவும், தமிழகத்துக்கான காவிரி நதிநீரை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தவெக அரசை கண்டித்து கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை எதிரில் மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் ராமு வரவேற்றார். இதில் பங்கேற்ற அதிமுக துணை பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி கண்டன உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, தேர்தலின்போது 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் விஜய் வாக்குறுதி அளித்ததாக கூறினார். ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும், ரூ.75 ஆயிரம் வரை கடன் பெற்றவர்களுக்கு மட்டுமே தள்ளுபடி வழங்கப்படும் என்றும், அதற்கு அதிகமாக கடன் பெற்றவர்களுக்கு ரூ.35 ஆயிரம் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தின் ஜீவாதாரமான காவிரி நதிநீரை பெற்றுத்தர அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் முனுசாமி தெரிவித்தார். இந்த விவகாரத்தில் தவெக அரசுக்கு போதிய அனுபவம் இல்லை என்றும், அக்கட்சியின் தலைவர் விஜய் திடீரென முதல்வராகியுள்ளதாகவும் அவர் விமர்சித்தார். காவிரி பிரச்சினை தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தியபோதும் அரசு அதை ஏற்கவில்லை என்றும், நீதிமன்றத்தை நாட வேண்டும் என்ற ஆலோசனையையும் அரசு பின்பற்றவில்லை என்றும் அவர் கூறினார்.
கர்நாடகத்துக்கு செல்வதாக முதல்வர் கூறுவதால் மட்டும் காவிரி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா என்றும் கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பினார். கர்நாடக அரசு தனது மாநில மக்களின் நலனை பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்தும் என்றும், மத்திய அரசு தனது ஆட்சியை பாதுகாத்துக் கொள்வதிலேயே கவனம் செலுத்தும் என்றும் அவர் கூறினார். தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு தவெக அரசு சுயமாக முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழக முதலீட்டாளர்கள் மாநாட்டில் செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப்படாதது, முதல்வர் விஜய்யின் ஆணவத்தின் உச்சம் என்றும் முனுசாமி விமர்சித்தார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விவசாயிகள், அரசு ஊழியர்கள், மாணவர்கள், பெண்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் அரசு ஏமாற்றிவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார். முதல்வர் தனது கட்சியின் கொள்கைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை அடிப்படையாகக் கொண்டு ஆட்சியை நடத்தாமல், அரசு அதிகாரிகள் தெரிவிக்கும் கருத்துகளை ஏற்றுக்கொண்டு சட்டப்பேரவையில் பேசுவதாகவும் அவர் கூறினார்.
முதல்வர் காலை 9 மணிக்கு பணிக்கு வந்து மாலை 5 மணி வரை ஆட்சி நடத்துவதாகவும், அதன் பின்னர் பொதுமக்களை சந்திப்பதில்லை என்றும் கே.பி.முனுசாமி விமர்சித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அந்த அவையின் தலைவர் நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் தவறில்லை என்றும், அதற்கு தேவையற்ற அரசியல் சாயம் பூசுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதிமுக நிர்வாகிகளான வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு கட்சியை பலவீனப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகவும், அதற்காக அவர்கள் தெரிவிக்கும் கருத்துகள் வேதனை அளிப்பதாகவும் முனுசாமி கூறினார். அவர்களது எண்ணம் ஒருவேளை நிறைவேறினாலும், அவர்களை தான் தொடர்ந்து மரியாதையுடன் பார்ப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், மத்திய அரசு மானாவாரி பயிர்களுக்கும் பயிர்க் காப்பீடு அறிவித்துள்ளதாக கூறிய முனுசாமி, தற்போது மழை பொய்த்துள்ளதுடன் காவிரி நீரும் கிடைக்காததால் மானாவாரி பயிர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் பாதிக்கப்பட்ட பயிர்களை அரசு கணக்கிட்டு, அதற்கான காப்பீட்டுத் தொகையை அரசே செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தொடர்ந்து சிரமங்களை எதிர்கொண்டு வரும் மா விவசாயிகளுக்கு உதவும் வகையில் ஒரு கிலோ மாங்காய்க்கு ரூ.5 மானியம் வழங்க வேண்டும் என்றும் கே.பி.முனுசாமி கோரிக்கை விடுத்தார்.



