சட்டப்பேரவையில் தமிழ் விவகாரத்தில் அமைச்சர் மரிய வில்சன் பேச்சுக்கு எதிர்ப்பு: பின்னர் அணுகுமுறையில் மாற்றம்
தமிழக சட்டப்பேரவை நிகழ்வின்போது, கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், நிதியமைச்சர் பட்ஜெட் வாசித்தபோது அவரது உச்சரிப்பு நேர்த்தியாக இல்லை என்றும், தமிழில் சில சொற்கள் இலக்கணப் பிழையுடன் இருந்ததாகவும் குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் மரிய வில்சன், தனது கல்வி மற்றும் பணிப் பின்னணி ஆங்கில மொழியுடன் தொடர்புடையது எனக் கூறி ஆவேசமாக பதிலளித்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது.
அப்போது பேசிய மரிய வில்சன், தான் 30 ஆண்டுகளாக கல்வித் துறையில் இருப்பதாகவும், தனது உரையாடல் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், சில காலமாக தன்னை உருவ கேலி செய்தவர்கள் தற்போது மொழி குறித்தும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளதாக கூறிய அவர், தனது மொழி அன்பு மற்றும் அமைதியின் மொழி என்றும் தெரிவித்தார். மேலும், தான் கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்றும், தனது தனித்தன்மையை யாருக்காகவும் மாற்றிக்கொள்ள முடியாது என்றும் ஆவேசமாக பேசியதுடன், மைக்கை தட்டியபடி அமர்ந்தார்.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், மதத்துக்கும் மொழிக்கும் தொடர்பில்லை என பலர் கருத்து தெரிவித்தனர். வீரமாமுனிவர், கால்டுவெல் உள்ளிட்ட வெளிநாட்டைச் சேர்ந்தவர்களே தமிழகத்துக்கு வந்து தமிழ் மொழியை கற்றுக்கொண்டு சிறப்பாகப் புலமை பெற்றதாகவும் சமூக வலைதளப் பயனர்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும், ‘பாதிப்பேருக்கு எவ்வளவு தமிழ் படித்தாலும் இது தெரியாது’ என அமைச்சர் கூறியதாகக் குறிப்பிடப்படும் கருத்து குறித்தும் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழை இவ்வாறு இழிவுபடுத்தும் வகையில் பேசலாமா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். அதேநேரத்தில், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் பொறுமையாகவும் மரியாதையுடனும் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு ஆவேசமாக பதிலளித்து மைக்கை தட்டியபடி அமர்ந்தது நியாயமா என்றும் சிலர் கேள்வி எழுப்பினர்.
சீமான் கண்டனம்
இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் அன்னைத் தமிழை அவமதிக்கும் வகையில் அமைச்சர் மரிய வில்சன் பேசியிருந்தால், அதற்காக அதே அவையில் மனம் வருந்தி மன்னிப்பு கோர வேண்டும் என அவர் அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார்.
நயினார் நாகேந்திரன் கேள்வி
தமிழ் மொழியின் ஆளுமையுடன் ஒரு மதத்தை ஒப்பிட்டு பேசுவது சரியா என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சர் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக சமூக வலைதளங்களிலும் பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து வெளியாகின.
பின்னர் அணுகுமுறையில் மாற்றம்
இந்த நிலையில், அடுத்ததாக சட்டப்பேரவைக்கு வந்த நிதியமைச்சர் மரிய வில்சன், திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வில் திமுக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மிகவும் பொறுமையாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. முந்தைய நாள் தான் ஆவேசமாக பேசியது தவறானது என்பதை சுட்டிக்காட்டும் வகையிலும் அவரது அணுகுமுறை இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், முதல்வர் விஜய்யை வாழ்த்தும் வகையில் ‘குட்டி ஸ்டோரி’ ஒன்றை அவர் கூறியதுடன், தங்கள் குடும்பத்தை வாழவைத்ததாக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் புகழையும் குறிப்பிட்டு பேசினார். இதனை பார்த்த பலரும், விமர்சனங்களை புரிந்துகொண்டு ஒரே இரவில் அமைச்சர் மரிய வில்சனின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதேவேளையில், அரசியலுக்கு புதிதாக வந்துள்ளதால், வரும் காலங்களில் இதுபோன்ற விஷயங்களை அவர் சரிசெய்துகொள்வார் என்றும் சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



