தொகுதி மறுவரையறை எதிர்ப்பு தமிழகத்தின் எதிர்காலத்துக்கு ஆரோக்கியமானதல்ல: நயினார் நாகேந்திரன்
தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தவெக அரசு கொண்டு வந்துள்ள தீர்மானம் தமிழக நலனுக்கு எதிரானது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ள எதிர்ப்பு மாநிலத்தின் எதிர்கால நலனுக்கு ஏற்றதாக இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள நயினார் நாகேந்திரன், தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முயற்சிப்பது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்களை பாதிக்கும் நடவடிக்கையாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கையாக ஒவ்வொரு வாக்குக்கும் சமமான மதிப்பு இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள்தொகை அதிகரிப்புக்கு ஏற்ப சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும்போதுதான், ஒவ்வொரு குடிமகனின் குரலுக்கும் நாடாளுமன்றத்தில் சமமான பிரதிநிதித்துவம் கிடைக்கும் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். தொகுதி மறுவரையறை என்பது வெறுமனே தொகுதிகளின் எல்லைகளை மாற்றும் நடவடிக்கை அல்ல என்றும், மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கான முக்கியமான செயல்முறை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, எந்த மாநிலத்துக்கும், குறிப்பாக தென் மாநிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் முடிவுகள் எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், தமிழக அரசு தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது மாநிலத்தின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதாக இருக்காது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், எந்தவொரு சீர்திருத்தத்தையும் முழுமையாக எதிர்ப்பதற்கு பதிலாக அதன் சாதக, பாதக அம்சங்களை ஆராய வேண்டும் என வலியுறுத்தியுள்ள நயினார் நாகேந்திரன், முதல்வர் விஜய் தலைமையிலான அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு அரசு தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே அவரது வலியுறுத்தலாக உள்ளது.



