“நீட் சமூக நீதிக்கு தடையல்ல; சீர்திருத்தி வலுப்படுத்துவதே தீர்வு” – தமிழிசை கருத்து
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானத்துக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வதற்கு பதிலாக, அதில் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொண்டு மேலும் வலுப்படுத்துவதே மாணவர்களின் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜன், நீட் தேர்வு சமூக நீதிக்கு தடையாக இல்லை என்றும், தரமான கல்வியை பெறுவதில் மாணவர்களுக்கு உள்ள சமமற்ற வாய்ப்புகளே உண்மையான சவால் என்றும் கூறியுள்ளார். பல்வேறு பள்ளிகள், கல்வி வாரியங்கள், மாவட்டங்கள் மற்றும் சமூக-பொருளாதார பின்னணிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு ஒரே தேசிய நுழைவுத் தேர்வு பொதுவான அளவுகோலை வழங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீட் பயிற்சி தொடர்பாக மாணவர்களுக்கு சிரமங்கள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதற்கான தீர்வாக அரசுப் பள்ளி மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு இலவசமாகவும் தரமாகவும் நீட் பயிற்சி வழங்க வேண்டும் என தமிழிசை தெரிவித்துள்ளார். தேர்வுத்தாள் கசிவு போன்ற பிரச்சினைகள் தொடர்பாக, தேர்வு நடைமுறைகளை மேலும் வலுப்படுத்தி, தவறிழைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் மன அழுத்தம் குறித்து கவலைகள் இருந்தால், நீட் தேர்வை ரத்து செய்வதற்கு பதிலாக அவர்களுக்கு ஆலோசனை, வழிகாட்டுதல் மற்றும் கல்வி ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழிசை வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் மருத்துவக் கல்வி வாய்ப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் விரிவடைந்துள்ளதாகவும், பல மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளும் எம்பிபிஎஸ் இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய மருத்துவ ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளும் தமிழகத்தில் மருத்துவக் கல்வி விரிவடைந்துள்ளதை வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ள தமிழிசை, இத்தகைய வாய்ப்புகளுக்கான பொதுவான தேசிய நுழைவுத் தேர்வை ஏன் ரத்து செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல், 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ சேர்க்கையை மீண்டும் கொண்டு வருவதில் பல்வேறு கல்வி வாரியங்கள் மற்றும் மாறுபட்ட மதிப்பீட்டு முறைகளில் பெறப்படும் மதிப்பெண்களை எப்படி ஒரே அளவுகோலில் நியாயமாக ஒப்பிட முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு மாணவரும் நியாயமான மற்றும் வெளிப்படையான போட்டியில் பங்கேற்கும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார். அரசியல் காரணங்களுக்காக ஒரு தேர்வை நீக்குவதை விட, மாணவர்களின் தேவைகள் மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மாணவர்களுக்கு சிறந்த பள்ளிகள், இலவச நீட் பயிற்சி மற்றும் உதவித்தொகைகள் வழங்கப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கான நம்பிக்கையை உருவாக்க வேண்டும் என்றும் தமிழிசை கூறியுள்ளார். ஆனால், நீட் வழங்கும் பொதுவான தேசிய வாய்ப்பை மாணவர்களிடம் இருந்து பறிக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றம் மாணவர்களை போட்டியில் இருந்து விலக்குவதற்கு பதிலாக, தேசிய அளவிலான போட்டியை எதிர்கொள்ள அவர்களை தயார்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தமிழிசை சுட்டிக்காட்டியுள்ளார். அதிகபட்ச மதிப்பெண் பெற்ற 17 மாணவர்களில், தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடபதி வேலாயுதம் 12-வது இடத்தை பெற்றுள்ளதாகவும், நாடு முழுவதும் 138 மாணவர்கள் 720-க்கு 690 மதிப்பெண்கள் பெற்ற நிலையில், அவர்களில் 12 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அகில இந்திய அளவில் முதல் 100 இடங்களுக்குள் 9 தமிழக மாணவர்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சாதனைகள் தமிழக மாணவர்களின் திறமை, உழைப்பு மற்றும் தேசிய அளவில் போட்டியிடும் திறனை வெளிப்படுத்துவதாக தமிழிசை தெரிவித்துள்ளார். அரசியல் கருத்துகளால் மாணவர்களின் எதிர்கால லட்சியங்கள் பாதிக்கப்படாமல், அவர்களின் சாதனைகளை கொண்டாட வேண்டும் என்றும், வெற்றிக் கதைகளை அடுத்த தலைமுறைக்கு முன்மாதிரியாக காட்ட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நீட் தேர்வு தொடர்பாக சவால்கள் இருந்தால், அவற்றை சிறந்த பயிற்சி, வழிகாட்டுதல் மற்றும் தேவையான ஆதரவின் மூலம் எதிர்கொள்ள வேண்டும் என்றும் தமிழிசை வலியுறுத்தியுள்ளார். மாணவர்களின் கனவுகளையும் லட்சியங்களையும் பலவீனப்படுத்தாமல், அவர்களின் சாதனைகளே அவர்களுக்கு ஊக்கமாக அமைய வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.



