நெல், கரும்பு கொள்முதல் ஊக்கத்தொகை உயர்வு; தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் வழங்க சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம்
தமிழக சட்டப்பேரவையில் நெல் மற்றும் கரும்பு கொள்முதலுக்கான மாநில அரசின் ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்குவதாக முதல்வர் விஜய் அறிவித்தார். சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகை உயர்த்தப்படுவதாக அவர் தெரிவித்தார். நெல் கொள்முதல் பருவம் செப்டம்பர் 1-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் மாநில அரசின் கூடுதல் ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அறிவிப்பின்படி, சன்ன ரக நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.289-ம், பொது ரக நெல்லுக்கு ரூ.159-ம் மாநில அரசின் ஊக்கத்தொகையாக கூடுதலாக வழங்கப்படும். இதன் மூலம் சன்ன ரக நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,750-ம், பொது ரக நெல்லுக்கு ரூ.2,600-ம் விவசாயிகளுக்கு விலையாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல் பயிரிடுதல், அறுவடை செய்தல் மற்றும் விற்பனை செய்வதில் விவசாயிகள் தங்களது உழைப்பு மற்றும் பொருளாதார வளங்களை முழுமையாக செலவிட்டு வருவதால், அவர்களின் நலனை பாதுகாப்பது அரசின் முக்கிய நோக்கம் என முதல்வர் குறிப்பிட்டார்.
கரும்பு விவசாயிகளுக்கும் கூடுதல் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 2025-26 கரும்பு அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்து கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள டன் ஒன்றுக்கு ரூ.3,290.50 விலையுடன், தமிழக அரசின் சார்பில் ரூ.709.50 சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இதன் மூலம் விவசாயிகளுக்கு ஒரு டன் கரும்புக்கு மொத்தம் ரூ.4,000 கிடைக்கும். கடந்த ஐந்து ஆண்டுகளில் கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகை ரூ.156 மட்டுமே உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது முதல் ஆண்டிலேயே ரூ.360.50 உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. விவசாயிகளை அரசு ஒருபோதும் கைவிடாது என்றும் முதல்வர் உறுதியளித்தார்.
இதனிடையே, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மனோன்மணீயம் சுந்தரனார் 1891-ம் ஆண்டு எழுதிய ‘மனோன்மணீயம்’ நாடக நூலின் பாயிரத்தில் இருந்து எடுக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து, 1970-ம் ஆண்டு நவம்பர் 23-ம் தேதி முதல் அரசு விழாக்களில் முதலில் பாடப்பட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்ட வரலாறும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டது.
மேலும், 2021-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மாநிலப் பாடல் என்ற அங்கீகாரம் வழங்கப்பட்ட பின்னர், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயமாகப் பாடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. தமிழ் மொழிக்கும், தமிழர் பண்பாட்டுக்கும் அளிக்கப்படும் மரியாதையின் வெளிப்பாடாக தமிழ்த்தாய் வாழ்த்து விளங்குகிறது என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில் தமிழகத்தின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில், அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயமாகப் பாடப்பட வேண்டும் என்று சட்டப்பேரவை ஒருமனதாக தீர்மானித்தது.
தீர்மானம் குறித்து பேசிய முதல்வர் விஜய், தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமல்ல என்றும், அது உயிர், பண்பாடு, நாகரிகம் மற்றும் சிந்தனையுடன் தொடர்புடையது என்றும் தெரிவித்தார். தமிழ்த்தாய் வாழ்த்து எந்த மொழி, மதம் அல்லது இனத்தையும் தாழ்த்திப் பேசவில்லை என்றும், தமிழின் பெருமையை எடுத்துக்காட்டும் அடையாளமாகவே அது விளங்குகிறது என்றும் அவர் கூறினார். ஒட்டுமொத்த இந்தியாவின் பன்முகத்தன்மையை உயர்த்திப் பிடிக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழகத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்றும், அதன் மரியாதையை பாதுகாப்பதில் தவெக அரசு எந்த சமரசமும் செய்யாது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தத் தீர்மானத்துக்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். பேரவைத் தலைவர் பிரபாகர் பேசும்போது, 1991-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பின்னர் தொடங்க வேண்டும் என்ற நடைமுறையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்ததாக குறிப்பிட்டார். திமுகவைச் சேர்ந்த கோவி.செழியன், தமிழ்த்தாய் வாழ்த்தை அரசாணை மூலம் நடைமுறைப்படுத்திய முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மற்றும் அதை கட்டாயமாக்கி அரசாணை பிறப்பித்த முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பங்களிப்புகளை குறிப்பிட்டதுடன், இதை தீர்மானமாக மட்டுமின்றி சட்டமாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அதிமுகவைச் சேர்ந்த பழனிசாமி, தமிழ் தொன்மையான மொழி என்றும், அது தமிழர்களின் பண்பாட்டு அடையாளம் என்றும் தெரிவித்தார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்பது யாருக்கும் எதிரான நடவடிக்கை அல்ல என்றும், தாய்மொழிக்கும் தமிழுக்கும் செலுத்தப்படும் மரியாதை என்றும் அவர் கூறினார். இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ கே.மாரிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ செல்வ சுவாமி, அமைச்சர்கள் ராஜ் மோகன், பெ.விஸ்வநாதன், வன்னி அரசு, ஷாஜஹான் மற்றும் பாமக எம்எல்ஏ சிவக்குமார் உள்ளிட்டோரும் தீர்மானத்தை வரவேற்று பேசினர்.
பின்னர் அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிக்கும் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் தலைவர் அறிவித்தார்.



