“வெற்றி பெற்றால் இபிஎஸ் காரணம்; தோல்வி என்றால் மாவட்ட செயலாளர்களா?” – சி.வி.சண்முகம் ஆவேசம்
“தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் அதற்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம் எனக் கூறுகிறார்கள். ஆனால், தோல்வி ஏற்பட்டால் மாவட்ட செயலாளர்களை பொறுப்பாக்குவது ஏன்?” என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். முறையாக கூட்டணி அமைக்காததும், கட்சியில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் ஒன்றிணைக்காததுமே அதிமுகவின் தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், வலுவான தலைமை வேண்டும் என்ற அடிப்படையில்தான் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்ததாகக் கூறினார். ஆனால் அவர் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற எந்தத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறவில்லை என்றும், சட்டப்பேரவை, நாடாளுமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் என பல்வேறு தேர்தல்களிலும் கட்சி தோல்வியை சந்தித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தின் தென் மாவட்டங்கள், டெல்டா பகுதிகள் மற்றும் சென்னையில் அதிமுக குறிப்பிடத்தக்க தோல்வியை சந்தித்துள்ளதாக சி.வி.சண்முகம் கூறினார். அதேவேளையில், விழுப்புரம் போன்ற வட மாவட்டங்களில் பாமகவின் ஆதரவால் அதிமுக வெற்றி பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே, தேர்தல் தோல்விக்கான காரணங்களை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருப்பதாகவும், காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி ராஜினாமா செய்ததாகவும் சி.வி.சண்முகம் கூறினார். இருப்பினும், எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பொதுச் செயலாளர் பதவியில் இருப்பதாகவும், அவரை ராஜினாமா செய்யுமாறு தாங்கள் கேட்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், திமுகவுடன் கூட்டணி அமைக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூற முடியுமா என்றும் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பினார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் இதுவரை வெளிப்படையாகப் பேசவில்லை என்றும் குற்றம்சாட்டினார். கட்சியின் கூட்டத்தை கூட்டினால், தேர்தல் தோல்விக்கான காரணங்களை விரிவாக எடுத்துரைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
எடப்பாடி பழனிசாமியின் சொந்த செல்வாக்கால் 47 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றதாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறியிருப்பதையும் சி.வி.சண்முகம் விமர்சித்தார். 47 தொகுதிகளில் மட்டுமே எடப்பாடி பழனிசாமிக்கு செல்வாக்கு உள்ளது என்றால், மற்ற தொகுதிகளில் அவரது செல்வாக்கு இல்லை என்று கூறுகிறாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அவரது சொந்த மாவட்டமான சேலத்தில் உள்ள 7 தொகுதிகளில் ஏன் அந்த செல்வாக்கு வெளிப்படவில்லை என்றும் சி.வி.சண்முகம் கேட்டார்.
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிமுக 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதாகவும், தென் மாவட்டங்களில் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார். சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் அதிமுக முழுமையாக தோல்வியடைந்ததாகவும், வட மாவட்டங்களில் பாமக ஆதரவின் காரணமாகவே சில இடங்களில் வெற்றி கிடைத்ததாகவும் சி.வி.சண்முகம் குறிப்பிட்டார்.
திருமாவளவனை முதல்வராக்க வேண்டும் என்று தான் கூறியதாக வெளியாகும் தகவல் குறித்தும் அவர் விளக்கம் அளித்தார். “ஆம், நான் கூறினேன். ஆனால் எந்தச் சூழலில் அந்தக் கருத்தை தெரிவித்தேன் என்பதையும் பார்க்க வேண்டும்” என்று சி.வி.சண்முகம் தெரிவித்தார். முறையாக கூட்டணி அமைக்காததும், கட்சியில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்காததுமே அதிமுகவின் தோல்விக்கு மிகப் பெரிய காரணம் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராயாமல் காழ்ப்புணர்ச்சியுடன் பேசுவதை கட்சியினர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சி.வி.சண்முகம் கூறினார். அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு தைரியமும் திராணியும் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் கட்சிக் கூட்டத்தை கூட்டலாம் என்றும், தாங்கள் அதில் கலந்து கொண்டு தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் சவால் விடுத்தார்.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி தங்களுக்கு பாடம் எடுக்கும் அளவுக்கு தகுதி பெற்றவர் அல்ல என்றும் சி.வி.சண்முகம் கடுமையாக விமர்சித்தார். விவசாயத் துறை அமைச்சராக இருந்தபோது ஜெயலலிதாவால் சிறையில் அடைக்கப்பட்டவர்தான் அவர் என்றும், எனவே தங்களுக்கு அவர் அறிவுரை கூறுவதற்கான தகுதி இல்லை என்றும் சி.வி.சண்முகம் ஆவேசமாக தெரிவித்தார்.



