“தவெகவின் ஐந்து ஆண்டு ஆட்சி விவசாயிகளின் பொற்காலமாக இருக்கும்” – ஆதவ் அர்ஜுனா
“200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் எனக் கூறிய திமுக, தனது தேர்தல் அறிக்கையில் விவசாயக் கடன் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. இதனை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமே ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், தவெகவின் ஐந்து ஆண்டு ஆட்சி விவசாயிகளுக்கு பொற்காலமாக அமையும்” என்று பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய அவர், 200 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என திமுக உறுதியாகக் கூறியதாகவும், அதே நேரத்தில் முதல்வர் விஜய் தன்னை ஒரு விவசாயி எனக் கூறியதை திமுகவினர் சட்டப்பேரவையில் மூன்று முறை பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். முதல்வர் விஜய்யின் முதல் பிரச்சாரமே பரந்தூரில் விவசாயிகளுக்காக நடைபெற்றதாகவும், அப்போதே தனது வாழ்க்கை விவசாயிகளுக்காக அர்ப்பணிக்கப்படும் என அவர் தெரிவித்ததாகவும் ஆதவ் அர்ஜுனா கூறினார்.
தவெக சார்பில் வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்ததாகவும், அதன் அடிப்படையில் முதல்வர் விஜய் ரூ.5,932 கோடி விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால், 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் எனக் கூறிய திமுக, தனது தேர்தல் அறிக்கையில் விவசாயக் கடன் குறித்து எந்த வாக்குறுதியையும் வழங்கவில்லை என்றும், இதனை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமே ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
விவசாயிகளுக்கு கடன் இருக்குமா, இருக்காதா என்பது கூட திமுகவினருக்குத் தெரியாதா என்றும் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பினார். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தாலும் விவசாயிகளின் கடன் தொடர்பாக இதுபோன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்காது என்றும், ஆனால் முதல்வர் விஜய்க்கு அந்த எண்ணம் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும், முதல்வர் விஜய் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடியவர் என்றும் ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டார்.
இதனிடையே, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக இருப்பதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்ததாகவும் அவர் தெரிவித்தார். இந்தப் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பொதுமக்களுக்கு தரமான அரிசி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் சன்ன ரக நெல்லுக்கான ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் ஆதவ் அர்ஜுனா கூறினார்.
மேலும், நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகையும் உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கரும்பு சாகுபடி 100 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும், திமுக ஆட்சிக் காலத்தில் கரும்பு உற்பத்தி 70 சதவீதம் சரிந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஐந்து ஆண்டுகால ஆட்சியையும் மூன்று மாத ஆட்சியையும் ஒப்பிடுவது சரியானதல்ல என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
“தவெகவின் இந்த ஐந்து ஆண்டுகள் விவசாயிகளின் பொற்காலமாக இருக்கும். முதல்வர் விஜய் விவசாயிகளுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார்” என்று ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.



