2029-ல் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த தொகுதி மறுவரையறை அவசியம்: ராகுலுக்கு ரிஜிஜு பதில்
2029-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டுமெனில், தொகுதி மறுவரையறை பணியை மேற்கொள்வது அவசியம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலளித்துள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தியின் எக்ஸ் பதிவை குறிப்பிட்டு கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ள பதிலில், மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கான இடஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் 2023-ன் கீழ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த இடஒதுக்கீடு நடைமுறைக்கு வருவதற்கு தொகுதி மறுவரையறை பணி மேற்கொள்ளப்படுவதும், 2023-ம் ஆண்டுக்குப் பிறகு வெளியிடப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுவதும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2026-ம் ஆண்டுக்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகளை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், சாதிவாரியான கணக்கெடுப்பு உள்ளிட்ட காரணங்களால் அந்தத் தரவுகள் இறுதியாக வெளியிடுவதற்கு கணிசமான காலம் ஆகலாம் என்றும் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இதனால் மகளிர் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் மேலும் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், குறைந்தபட்சம் 2034-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பாக அதை அமல்படுத்த முடியாமல் போகலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், 2029-ம் ஆண்டு நடைபெற உள்ள அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டுமெனில், ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகளின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டியது அவசியம் என ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியலமைப்புத் திருத்தங்களுடன் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா 2026-ன் கீழ், இதற்கான அமலாக்க வழிமுறைகள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், இதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்புத் திருத்த மசோதா 2026 தோல்வியடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே, 2029-ம் ஆண்டு தேர்தலில் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த தொகுதி மறுவரையறை அவசியம் என்று கிரண் ரிஜிஜு வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, கர்நாடகாவில் டி.கே.சிவக்குமார் தலைமையிலான அமைச்சரவையில் ஒரு பெண் கூட இடம்பெறவில்லை என்றும் கிரண் ரிஜிஜு குறிப்பிட்டுள்ளார். இது 33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி கூறியது என்ன?
பெண்களின் முன்னேற்றம் மற்றும் நாட்டின் வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பு குறித்து ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட வீடியோவில், இந்திய பெண்களின் ஆற்றல் முடக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தவும், கனவு காணவும் போதிய வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை என்றும் தெரிவித்திருந்தார். பெண்கள் தங்களை முழுமையாக வெளிப்படுத்திக்கொள்ள முடியாத நாடு வெற்றி பெற முடியாது என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த வீடியோவை குறிப்பிட்டு கிரண் ரிஜிஜு வெளியிட்ட எக்ஸ் பதிவில், ராகுல் காந்தியின் நிலைப்பாட்டில் பெண்கள் தொடர்பாக தெளிவான மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், இது காங்கிரஸ் கட்சியிடமிருந்து வரும் நேர்மறையான செய்தியாகத் தெரிகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், காங்கிரஸ் கட்சி மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிபந்தனையின்றி ஆதரிக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா 2023, காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஏற்கெனவே ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுவிட்டது என்று குறிப்பிட்டிருந்தார். மசோதா நிறைவேற்றப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்தும் அது ஏன் இன்னும் அமல்படுத்தப்படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், மகளிர் இடஒதுக்கீட்டை தேவையற்ற வகையில் தொகுதி மறுவரையறையுடன் ஏன் இணைக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, 2023-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எந்தவித நிபந்தனையும் இன்றி அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இந்தப் பதிவை குறிப்பிட்டே கிரண் ரிஜிஜு தற்போது பதில் அளித்துள்ளார்.



