தவெக அமைச்சரை சந்தித்தது ஏன்? அதிமுகவை விட்டு செல்லவில்லை என எஸ்.பி. வேலுமணி விளக்கம்
தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய தவெக அமைச்சருடனான சந்திப்பு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. எஸ்.பி. வேலுமணி விளக்கம் அளித்துள்ளார். கட்சியை விட்டு விலகுவதாக பரவி வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்றும், தாங்கள் அதிமுகவிலேயே தொடர்வதாகவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை கூட்டம் முடிந்த பிறகு, அதிமுக நிர்வாகிகளான சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி மற்றும் கே.பி. அன்பழகன் ஆகியோர் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்தை அவரது அலுவலகத்தில் சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர். இதற்கு முன்பாக அவர்கள் அமைச்சர் செங்கோட்டையனையும் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு ஊகங்களை ஏற்படுத்திய நிலையில், அதற்கான விளக்கத்தை எஸ்.பி. வேலுமணி வழங்கினார்.
அவர் கூறுகையில், பட்ஜெட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த தாலிக்கு தங்கம், மடிக்கணினி உள்ளிட்ட திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கது என்றார். மேலும், தற்போதைய அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை எதிர்காலத்தில் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றும், அத்திக்கடவு–அவிநாசி திட்டம்-2 செயல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சர் ஆனந்திடம் நேரில் வலியுறுத்தியதாக தெரிவித்தார். அதிமுகவை விட்டு விலகுவதாக பரப்பப்படும் தகவல்களை மறுத்த அவர், “அதிமுகதான் எங்கள் கட்சி” என்று உறுதியாகக் கூறினார்.
இதுகுறித்து சி.வி. சண்முகமும் விளக்கம் அளித்தார். மானியக் கோரிக்கை தொடர்பாக தொகுதி வளர்ச்சி கோரிக்கைகளை அமைச்சர் ஆனந்திடம் வழங்குவதற்காகவே இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும், தமிழக அமைச்சர் என்பதால் அவரை சந்தித்ததாகவும் தெரிவித்தார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை ஏன் சந்திக்கவில்லை என்ற கேள்விக்கு, “அவருக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு? நான் ஏன் அவரை சந்திக்க வேண்டும்?” என்று பதிலளித்தார்.
இதற்கிடையில், சட்டப்பேரவையில் முன்வரிசை இருக்கை வழங்கப்படாதது குறித்து மஜக எம்.எல்.ஏ. மு. தமிழ்முன் அன்சாரி, மமக தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் கொமதேக எம்.எல்.ஏ. நித்தியானந்தன் ஆகியோர் பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். தாங்கள் தனித்தனி கட்சிகளை நடத்தி வருவதால் முன்வரிசையில் இடம் வழங்க வேண்டும் என வலியுறுத்திய அவர்கள், இந்த விவகாரத்தில் அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவைத் தலைவர் உறுதியளித்ததாக தெரிவித்தனர்.



