காவிரி விவகாரம் குறித்து முதல்வர் விஜய் பதில் அளிக்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின் சவால்
காவிரி விவகாரம் மற்றும் விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து சட்டப்பேரவையில் கேள்விகள் எழுப்ப உள்ளதாகவும், அதற்கு முதல்வர் விஜய் நேரடியாக பதில் அளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி விவகாரம் தொடர்பாக நாளை ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வருவதற்காக சபாநாயகரிடம் கடிதம் வழங்கியுள்ளதாக கூறினார். அந்த விவாதத்தின்போது விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்படும் என்றும், அதற்கு முதல்வர் விஜய் பதில் அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
வேளாண் பட்ஜெட் குறித்து விமர்சித்த உதயநிதி ஸ்டாலின், இது விவசாயிகளின் நலனுக்கான பட்ஜெட்டாக இல்லாமல், முதல்வரை பாராட்டும் வகையில் அமைந்துள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும், ஏற்கனவே திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு புதிய பெயர்கள் சூட்டி அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கடந்த மூன்று மாதங்களாக விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருவதாக குறிப்பிட்ட அவர், வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பயனளிக்கும் முக்கிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என தெரிவித்தார்.
தேர்தல் காலத்தில் 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் முழு பயிர்க் கடனும் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் விஜய் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும் உதயநிதி குற்றம்சாட்டினார்.
மேகேதாட்டு அணை விவகாரம், காவிரி நீர் பிரச்சினை மற்றும் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
விவசாயிகளின் உரிமைக்காகவும், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருப்புச் சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்ததாக தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், காவிரி விவகாரம் தொடர்பான கேள்விகளுக்கு முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் பதில் அளிக்க வேண்டும் என மீண்டும் சவால் விடுத்தார்.



