தமிழகத்தில் படிப்படியாக ஊழல் குறைக்கப்படுகிறது: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி
“தமிழகத்தில் முதல்வர் விஜய் ஆட்சியில் படிப்படியாக ஊழல் குறைக்கப்படுகிறது” என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஊழல் செய்தால் பதவி பறிக்கப்படும் என்று தமிழக முதல்வர் விஜய் கூறுவது போலப் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறத் தயாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரி என்டிஏ ஆட்சியில் நிர்வாகம் முற்றிலும் ஸ்தம்பித்துள்ளதாகவும், கோப்புகளை வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் தாமதிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அமைச்சர்களிடையே இலாகாக்கள் ஒதுக்கீடு செய்வதில் தெளிவின்மை நிலவுவதாகவும், வாக்களித்த மக்களுக்கு என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி அரசு துரோகம் இழைத்து வருவதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன், காமராஜருடன் முதல்வர் ரங்கசாமியை ஒப்பிட்டுப் பேசியதற்குத் தனது கண்டனத்தைப் பதிவு செய்த நாராயணசாமி, கறைபடாத கரங்களுக்குச் சொந்தக்காரரான காமராஜரின் பெயருக்கு ஆளுநர் களங்கம் விளைவிக்கக் கூடாது என்றார். மேலும், ரேஷன் அரிசி விநியோகம் மற்றும் போலி மருந்து தொழிற்சாலை விவகாரங்களில் அரசு உரிய விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழகத்தில் ஊழலைக் குறைக்க முதல்வர் விஜய் பல்வேறு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகப் பாராட்டிய அவர், புதுச்சேரியில் நிலவும் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்துக் காங்கிரஸ் கட்சி சார்பில் விரைவில் பெரிய அளவிலான போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் எச்சரித்தார்.



