முசாபர்நகர் கலவர வழக்கு: பாஜக, இந்து அமைப்புகளைச் சேர்ந்த 25 பேர் மீதான வழக்குகள் வாபஸ்
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற கலவரம் தொடர்பாக பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த 25 பேர் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற மாநில அரசு தாக்கல் செய்த கோரிக்கையை எம்பி – எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
முசாபர்நகர் மாவட்டம் நக்லா மடோர் பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி நடைபெற்ற மகாபஞ்சாயத்து கூட்டத்தில் பேசியதாக கூறி, பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த 25 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தடையுத்தரவை மீறியது, அரசு ஊழியர்கள் தங்களது பணிகளை மேற்கொள்வதற்கு இடையூறு ஏற்படுத்தியது மற்றும் மத ரீதியான பதற்றத்தைத் தூண்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தன.
பாஜக தலைவர்களான சுரேஷ் ரானா, முன்னாள் எம்எல்ஏ சங்கீத் சோம் மற்றும் முன்னாள் எம்பி பாரதேந்திர சிங் ஆகியோர் ஆத்திரமூட்டும் வகையில் பேசியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முசாபர்நகரில் மத மோதல்கள் ஏற்பட்டன. இந்த மோதல்கள் பின்னர் பெரும் கலவரமாக மாறியதாக கூறப்படுகிறது.
கலவரத்தைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் குறைந்தது 60 பேர் உயிரிழந்தனர். மேலும், ஆயிரக்கணக்கான இஸ்லாமிய குடும்பங்கள் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேறி இடம்பெயர்ந்தனர். முசாபர்நகர் மற்றும் ஷாம்லி மாவட்டங்களில் பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தல் சம்பவங்கள் நடைபெற்றதாகவும் அப்போது புகார்கள் எழுந்தன.
இந்த சம்பவங்கள் தொடர்பாக மாநில அமைச்சர் கபில் தேவ் அகர்வால், முன்னாள் மத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யான், முன்னாள் மாநில அமைச்சர் சுரேஷ் ரானா, முன்னாள் மாநில அமைச்சர் அசோக் கட்டாரியா உள்ளிட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. முன்னாள் எம்பிக்களான பாரதேந்திர சிங், சோகன்வீர் சிங், முன்னாள் எம்எல்ஏக்களான அசோக் கன்சால், உமேஷ் மாலிக், விஹெச்பி தலைவர் சாத்வி பிராச்சி, தாஸ்னா சிவக் கோயிலைச் சேர்ந்த நர்சிங்கானந்த் உள்ளிட்டோரும் வழக்கில் சேர்க்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்குகள் எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த 25 பேர் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக மாநில அரசு சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. இதன் மூலம், சம்பந்தப்பட்ட 25 பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெறுவதற்கான அரசின் நடவடிக்கைக்கு நீதிமன்றத்தில் அடுத்தகட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதனிடையே, கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முசாபர்நகரில் நடைபெற்ற கலவரத்தில் 8 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான மற்றொரு வழக்கில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி 37 பேரை உத்தரப் பிரதேச நீதிமன்றம் விடுதலை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.



