நீட் தேர்வு ரத்து, எஃப்.சி.ஆர்.ஏ. திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: தமிழக சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றம்
தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின் (எஃப்.சி.ஆர்.ஏ.) திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரியும் கொண்டுவரப்பட்ட தனித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இரு தீர்மானங்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகர் அறிவித்தார்.
நீட் தேர்வுக்கு எதிராக தனித் தீர்மானம்
சட்டப்பேரவை கூட்டம் நேற்று காலை தொடங்கியதும், சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் நீட் தேர்வு தொடர்பான தனித் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். நீட் தேர்வு சமூக நீதி, சமத்துவம் மற்றும் மாநிலங்களின் உரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் மற்றும் சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்புகளை இந்தத் தேர்வு முறை பெரிதும் பாதிப்பதாகவும் அவர் கூறினார்.
பள்ளியில் 12 ஆண்டுகள் மாணவர்கள் கற்கும் கல்வியை விட, ஒரே நாளில் நடைபெறும் ஒரு நுழைவுத் தேர்வு அவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது கல்வியின் உண்மையான நோக்கத்துக்கும் பள்ளிக் கல்வியின் முக்கியத்துவத்துக்கும் முரணானது என அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், நீட் தேர்வு முறையில் தனியார் பயிற்சி மையங்களே அதிகளவில் பயனடைவதாகவும், சமூக நீதியை பாதிக்கும் மற்றும் சம வாய்ப்புகளை குறைக்கும் எந்தத் தேர்வு முறையையும் ஏற்க முடியாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்றும் தெரிவித்தார்.
தமிழகம் நீண்ட காலமாக 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடைமுறைப்படுத்தி, நாட்டிலேயே முன்னோடியான பொது சுகாதார கட்டமைப்பை உருவாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார். எனவே, மத்திய சட்டங்களில் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு நீட் தேர்வு முறையை ரத்து செய்து, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாநில அரசே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்தத் தீர்மானத்தின் மீது பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், ஏ.வ.வேலு உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துப் பேசினர். திமுகவைச் சேர்ந்த வி.முத்துராஜா, அதிமுகவைச் சேர்ந்த ஓ.எஸ்.மணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கட்சியின் ஆர்.செல்லசுவாமி, பாமகவின் சவுமியா அன்புமணி உள்ளிட்டோரும் தீர்மானத்தை ஆதரித்தனர். பாஜக உறுப்பினர் போஜராஜன் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார்.
எஃப்.சி.ஆர்.ஏ. திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு
இதனைத் தொடர்ந்து, வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டமான எஃப்.சி.ஆர்.ஏ.வில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். எஃப்.சி.ஆர்.ஏ. விதிமுறைகள் தொண்டு நிறுவனங்களின் தன்னாட்சி மற்றும் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளை பாதிக்கக்கூடும் என அவர் தெரிவித்தார். மேலும், இந்த மசோதா தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு விரிவான ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்தத் தீர்மானத்தின் மீது பேசிய அமைச்சர் ஏ.எம்.ஷாஜகான், தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகக் கூறினார். அமைச்சர் வன்னியரசு, சிறுபான்மையினரை பாதிக்கும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இந்த மசோதா இருப்பதாக விமர்சித்தார். எஸ்.ஆஸ்டின், இந்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கட்சித் தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
அதேவேளை, அதிமுகவைச் சேர்ந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வெளிநாட்டு நிதி மீதான கட்டுப்பாடுகளை வரவேற்பதாகவும், சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேவையான திருத்தங்களைச் செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். பாஜக உறுப்பினர் எம்.போஜராஜன், தேசத்திற்கு எதிரான செயல்களைத் தடுக்கும் நோக்கிலேயே எஃப்.சி.ஆர்.ஏ. சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவதாகக் கூறி மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தார்.
மமகவைச் சேர்ந்த எம்.எச்.ஜவாஹிருல்லா, வெளிநாடுகளில் இருந்து வரும் நிதியை வங்கிக் கணக்குகள் மூலம் கண்காணிக்க முடியும் என்றும், எஃப்.சி.ஆர்.ஏ. சட்டம் சிறுபான்மையினரை மட்டுமின்றி கல்வி மற்றும் மருத்துவ சேவைகளில் ஈடுபட்டுள்ள பல்வேறு தரப்பினரையும் பாதிக்கக்கூடும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் ஆர்.செல்லசுவாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கே.மாரிமுத்து, தேமுதிகவைச் சேர்ந்த பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் தீர்மானத்திற்கு ஆதரவாகப் பேசினர்.
எஃப்.சி.ஆர்.ஏ. திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர் வெளிநடப்பு செய்ததைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகர் அறிவித்தார்.



