மாணவர்களின் குரல் ஒன்றிணைந்தால் மட்டுமே அரசு செயல்படும் – ராகுல் காந்தி பிரயாக்ராஜ் பயணம்
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் நாளை (ஆகஸ்ட் 8) நடைபெற உள்ள மாணவர்களின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஒன்றுபட்ட குரல்கள் எழும்போது மட்டுமே அரசு நடவடிக்கை எடுக்கும் என அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில், போட்டித் தேர்வுகளுக்கு அதிகமான இளைஞர்கள் தயாராகி வரும் பிரயாக்ராஜ் நகருக்கு செல்ல இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் கடின உழைப்பில் எந்த குறையும் இல்லை என்றும், ஆனால் அவர்களின் முயற்சிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்காத அமைப்பின் செயல்பாடுகளில் தான் பிரச்சினை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வினாத்தாள் கசிவு, அரசு வேலை நியமனங்களில் தாமதம், பல ஆண்டுகளாக நீடிக்கும் காத்திருப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டும் அதற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
ராஜஸ்தானின் கோட்டா, உத்தராகண்ட்டின் டேராடூன் உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்களின் குரல்கள் எழுந்ததாகவும், டெல்லியில் கேள்வி எழுப்பிய மாணவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒன்றுபட்ட குரல்கள் தொடர்ந்து ஒலிக்கும் போது மட்டுமே அரசு செயல்படும் என்றும், மாணவர்களின் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்காகவே பிரயாக்ராஜ் வருவதாகவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 8-ம் தேதி மாலை 5 மணிக்கு பிரயாக்ராஜ் கே.பி. மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.



