வேளாண் பட்ஜெட் 2026-27: எஸ்சி, எஸ்டி விவசாயிகளுக்கு அம்பேத்கர் திட்டம் உட்பட புதிய சலுகைகள் அறிவிப்பு
2026–27-ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டில், ஆதி திராவிடர் (எஸ்சி) மற்றும் பழங்குடியின (எஸ்டி) விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு ‘அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவி திட்டம்’ அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் நலத்திட்ட பலன்களை தடையின்றி பெறவும், நீராதாரங்களை உருவாக்கி வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், உயர் மதிப்பு வேளாண் திட்டங்களில் பயனாளிகள் செலுத்த வேண்டிய பங்குத் தொகைக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படும். நிழல் வலைக்குடில்கள், பசுமைக் குடில்கள், சூரிய கூடார உலர்த்திகள், மதிப்புக்கூட்டும் இயந்திரங்கள், ஒருங்கிணைந்த பண்ணைகள் மற்றும் பண்ணை இயந்திரங்களுக்கு 70 சதவீத மானியமும், சூரிய சக்தி பம்ப்செட்டுகள் அமைக்க 80 சதவீத மானியமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீர்ப்பாசன வசதி இல்லாத 300 எஸ்சி மற்றும் எஸ்டி விவசாயிகளின் புன்செய் நிலங்களில் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள், மின் மோட்டார் அல்லது சூரிய சக்தி பம்ப்செட்டுகளுடன் 100 சதவீத மானியத்தில் அமைக்கப்படும். இதற்காக ரூ.56.72 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கால்நடை, மீன் மற்றும் தேனீ வளர்ப்பு உள்ளிட்ட வேளாண் சார்ந்த தொழில்களுக்கு ரூ.3,000 கோடி மதிப்பிலான குறுகிய கால மூலதனக் கடனும் வழங்கப்படும். மேலும், விளைபொருட்கள் வீணாவதைத் தடுக்க ரூ.10 கோடியில் 43,500 விவசாயிகளுக்கு தார்பாய்கள் வழங்கப்படுவதுடன், ரூ.23.06 கோடியில் 1,000 விவசாயிகளுக்கு சூரிய சக்தி பம்ப்செட்டுகளும் அமைக்கப்பட உள்ளன.
மண்வளத்தை பாதுகாக்கும் நோக்கில் ஐந்தாண்டு கால ‘தமிழ்நாடு மண்வள பாதுகாப்பு இயக்கம்’ ரூ.600 கோடி செலவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பசுந்தாள் உர விதைகள் மானிய விலையில் வழங்கப்படுவதுடன், இயற்கை மற்றும் உயிர்ம வேளாண் முறைகள் ஊக்குவிக்கப்படும். மேலும், நிரந்தர மண்புழு உரக்கூடங்கள் அமைத்தல், வளம் குறைந்த நிலங்களை மீட்டெடுக்கும் செயல் விளக்கங்கள், நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோக மானியங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நகர்ப்புற மக்களிடையே அதிக ஊட்டச்சத்து கொண்ட ‘தளிர்க் கீரைகள்’ பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் ரூ.1.20 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இதன் கீழ் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் 20 ஆயிரம் தளிர்க் கீரை வளர்ப்பு தொகுப்புகள் விநியோகிக்கப்பட உள்ளன. மேலும், தோட்டக்கலைப் பயிர்களுக்கான நிரந்தர பந்தல் அமைத்தல், வாழை சாகுபடிக்கு முட்டுக் கொடுத்தல் மற்றும் தென்னை சாகுபடிக்கான சிறப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளும் 2026–27 வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.



