தமிழகத்தில் குற்றங்களைத் தடுக்க அதிரடி நடவடிக்கை: ஒரே வாரத்தில் 1,155 ரவுடிகள் கைது என டிஜிபி தகவல்!
சென்னை: தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உட்பட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் தடுக்க அனைத்து மாவட்ட காவல்துறையினருக்கும் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் தீவிர உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில், ரவுடிகள், சமூக விரோதிகள் மற்றும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் சிறப்புச் சோதனைகளையும், தீவிர நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.
அதன்படி, கடந்த 15-ம் தேதி முதல் 21-ம் தேதி வரையிலான ஒரே வாரத்தில் மாநிலம் முழுவதும் சுமார் 31 ஆயிரத்து 5 சரித்திரப்பதிவேடு ரவுடிகள், குற்றக் குணமுடையோர் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவர்களின் இருப்பிடங்களில் காவல்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இந்த அதிரடி சோதனையின் போது பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடைய 1,155 நபர்கள் கைது செய்யப்பட்டு உடனடியாகச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், பிணையில் வெளிவர முடியாத பிடியாணைகளை (Non-Bailable Warrants) நிறைவேற்றும் தீவிர நடவடிக்கையின் கீழ், ஒரே வாரத்தில் மட்டும் 2,906 பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள பிடியாணைகளை முழுமையாக நிறைவேற்றவும், தலைமறைவாக உள்ள மற்ற முக்கியக் குற்றவாளிகளைத் விரைவாகக் கைது செய்யவும் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, ஜாமீனில் வெளியே வந்து அதன் நிபந்தனைகளை மீறி மீண்டும் மீண்டும் குற்றங்களில் ஈடுபடும் நபர்களின் ஜாமீனை உடனடியாக ரத்து செய்யத் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி-க்கள் மற்றும் சிறப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.



