மகா நிக்கோபார் திட்ட ஆய்வறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்
மகா நிக்கோபார் தீவு திட்டத்துக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதிகளை மறுஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் அறிக்கையை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) உடனடியாக வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், மக்களவையில் தீர்ப்பாயங்கள் சீர்திருத்த மசோதா, 2026 விவாதத்துக்கு வரவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உள்ளிட்ட நாட்டின் 16 பகுதி-நீதிமன்ற அமைப்புகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான மசோதாவாக இது அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், 2021-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தீர்ப்பாயங்கள் சீர்திருத்தச் சட்டத்தின் முக்கிய பிரிவுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார். தீர்ப்பாயங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பதற்காக சுதந்திரமான தேசிய தீர்ப்பாயங்கள் ஆணையத்தை அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் வகையில் புதிய மசோதாவை கொண்டுவரும் நிலைக்கு மத்திய அரசு தற்போது தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு தனது கொள்கைகளை நியாயப்படுத்த முயன்று தோல்வியடைந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க தற்போது இந்த சீர்திருத்தங்களை மேற்கொள்வதாகவும் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார். தன்னாட்சி அதிகாரம் பாதிக்கப்பட்டுள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயம், புதிய சட்டத்தின் மூலம் மீண்டும் தனது சட்டப்பூர்வ அதிகாரத்தைப் பெறும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன் முதல் நடவடிக்கையாக, மகா நிக்கோபார் தீவு திட்டத்துக்கான சுற்றுச்சூழல் அனுமதி தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு, கடந்த 2025 ஜூலை 8-ம் தேதி சீல் வைக்கப்பட்ட உறையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் சமர்ப்பித்த அறிக்கையை உடனடியாக பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்றும் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.



