“மக்களின் நம்பிக்கையை பெறுவது கடினம், இழப்பது எளிது” – புதிய எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
அரசியல் வாழ்க்கையில் மக்களின் நம்பிக்கையை பெறுவது மிகவும் கடினம் என்றும், ஆனால் அதை இழப்பது மிக எளிதானது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த 37 பாஜக எம்.பி.க்கள் பிரதமர் மோடியை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது பிரதமர் அவர்களுடன் காலை உணவு அருந்தினார். நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன், முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் மற்றும் பிற கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைந்த எம்.பி.க்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பில் புதிய எம்.பி.க்களுக்கு அறிவுரை வழங்கிய பிரதமர் மோடி, பொது வாழ்க்கையில் இருக்கும் சவால்கள் மற்றும் தவறான பழக்கவழக்கங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறினார். அரசியல் பொறுப்புகளில் இருக்கும் போது சிறிய தவறு கூட பெரிய பிரச்சினையாக மாறக்கூடும் என்பதால், தேவையற்ற மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்களின் தொடர்புகளை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், புதிய எம்.பி.க்கள் தங்களது அதிகாரப்பூர்வ லெட்டர் பேட் மற்றும் கையொப்பங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், அவை தவறான நபர்களின் கைகளுக்கு செல்லாத வகையில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
பொது வாழ்க்கையில் தூய்மையை கடைப்பிடித்து, மக்களுக்கு சேவை செய்வதே அரசியல்வாதிகளின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தங்களது தொகுதி மக்களின் குறைகளை பொறுமையுடன் கேட்டறிந்து, அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.
அரசியலில் மக்களின் நம்பிக்கையை பெறுவது கடினம், ஆனால் அதை இழப்பது மிகவும் எளிது என குறிப்பிட்ட பிரதமர் மோடி, பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும், இளைஞர்களின் கருத்துகள் மற்றும் பிரச்சினைகளை கவனமாக கேட்டால் மட்டுமே சரியான தீர்வுகளை உருவாக்க முடியும் என்றும் தெரிவித்தார்.



