ஐஎன்எஸ் மகேந்திரகிரி போர்க்கப்பல் சுயசார்பு இந்தியாவின் பெருமை: பிரதமர் மோடி புகழாரம்
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் மகேந்திரகிரி போர்க்கப்பல், நாட்டின் சுயசார்பு முயற்சிகளுக்கு மிகப்பெரிய அடையாளமாக திகழ்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ஒலிபரப்பாகும் “மனதின் குரல்” வானொலி நிகழ்ச்சியின் 136-வது அத்தியாயத்தில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, கார்கில் வெற்றி தினத்தை நினைவுகூர்ந்து, நாட்டுக்காக உயிர்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
கார்கில் போரின் போது உயரமான மலைப் பகுதிகள், கடும் குளிர் மற்றும் எதிரிகளின் சவால்களை இந்திய வீரர்கள் துணிச்சலுடன் எதிர்கொண்டதாக பிரதமர் குறிப்பிட்டார். நாட்டின் பாதுகாப்புக்காக உயிர்நீத்த வீரர்களின் தியாகத்தை என்றும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்திய கடற்படையில் சமீபத்தில் இணைக்கப்பட்ட ஐஎன்எஸ் மகேந்திரகிரி போர்க்கப்பல் முழுமையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டதாகவும், இது சுயசார்பு இந்தியாவின் வளர்ச்சியை பிரதிபலிப்பதாகவும் பிரதமர் கூறினார்.
மேலும், சமீபத்திய இந்தோனேசியா பயணத்தின் போது இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையே பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி தொடர்பான முக்கிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். பாதுகாப்பு தளவாட உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறையில் இந்தியா புதிய உயரங்களை எட்டி வருவதாகவும் பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.
மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து பேசிய பிரதமர், பருவமழை காலத்தில் ஒவ்வொரு துளி நீரையும் சேமிக்க மக்கள் முன்வர வேண்டும் என்றும், மழைநீர் சேகரிப்பை மிகப்பெரிய மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், கிளாஸ்கோவில் தொடங்கிய காமன்வெல்த் போட்டிகளில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு சாதனைகள் படைத்து வருவதாகவும் பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவு நாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்திய பிரதமர், கனவு காணும் பழக்கத்தை மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் விதைத்தவர் கலாம் என்றும், ஆசிரியர் பணியை அவர் மிகவும் நேசித்தார் என்றும் நினைவுகூர்ந்தார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் “வீடு தோறும் தேசியக் கொடி” இயக்கத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும், வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். மேலும், நாட்டின் வளர்ச்சிக்கான புதிய சிந்தனைகள் மற்றும் கருத்துகளை மக்கள் mygov இணையதளம் மூலம் பகிர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.



