காஞ்சிபுரம் அருகே ஆடித் திருவிழாவில் பயங்கரம்: முன்விரோதத் தகராறில் இருவர் வெட்டிக் கொலை
காஞ்சிபுரம் அருகே படுநெல்லி கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு, இரட்டைக் கொலையில் முடிந்தது. திருவிழாவின் முதல் நாளான நேற்று இரவு, சந்துரு மற்றும் விக்கி என்கிற நீலகண்டன் ஆகிய இருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
படுநெல்லி கிராமத்தில் நேற்று ஆடித் திருவிழா தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியாக பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்ட பின்னர், இரவு சுவாமி வீதியுலா புறப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. அப்போது, போதையில் இருந்ததாகக் கூறப்படும் அதே பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள், ஒலிப்பெருக்கியில் கானா பாடல்களை ஒலிபரப்ப வேண்டும் எனக் கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்து போலீஸார் வந்ததைத் தொடர்ந்து அந்தக் குழுவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்நிலையில், ஏற்கெனவே இருந்த முன்விரோதத்தை அடிப்படையாகக் கொண்டு, அந்தக் கும்பல் சந்துரு மற்றும் விக்கி என்கிற நீலகண்டன் ஆகிய இருவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னேரிக்கரை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடல்களை மீட்க முயன்றனர்.
ஆனால், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் போலீஸாரை தடுத்து நிறுத்தி, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததே சம்பவத்துக்கு காரணம் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் மேலும் பதற்றமான சூழல் நிலவியது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு போலீஸார் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொலையில் தொடர்புடையதாகக் கூறப்படும் தலைமறைவான நபர்களைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள பொன்னேரிக்கரை போலீஸார், கொலைக்கான முழுமையான காரணம் மற்றும் தொடர்புடைய நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், படுநெல்லி கிராமத்தில் தொடர்ந்து பதற்றம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கோயில் திருவிழா நடைபெறும் சூழலில் இரட்டைக் கொலை நடந்துள்ளதால், அப்பகுதியில் போலீஸ் கண்காணிப்பும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.



