சென்னை லாட்ஜில் போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்த திரிபுரா இளைஞர் கைது
சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் போதைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படும் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து போதை மாத்திரைகள், ஹெராயின் பவுடர் மற்றும் தொடர்புடைய பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ஹிதய் உசேன் (23), கோவிலம்பாக்கத்தில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி போதைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக மயிலாப்பூர் காவல் துணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார் சம்பந்தப்பட்ட லாட்ஜில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் போது ஹிதய் உசேனை பிடித்து விசாரணை நடத்திய போலீஸார், அவர் தங்கியிருந்த அறையை சோதனையிட்டனர். அப்போது அறையில் ஏராளமான போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து 810 போதை மாத்திரைகள், 78 கிராம் ஹெராயின் பவுடர், போதைப் பொருள் பயன்படுத்துவதற்கான 200 குப்பிகள், 2 செல்போன்கள் மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து ஹிதய் உசேனை கைது செய்த தனிப்படை போலீஸார், அவரை ஜாம்பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக, கடந்த ஜூலை 17-ம் தேதி இதே லாட்ஜில் நடத்தப்பட்ட சோதனையில் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களிடமிருந்து 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் விற்பனை கும்பலுக்கு திரிபுராவைச் சேர்ந்த துஷார் உசேன் என்பவர் தலைவராக செயல்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது தலைமறைவாக உள்ள துஷார் உசேனை கைது செய்ய தனிப்படை அமைத்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த கும்பலுடன் தொடர்புடையவர்கள் யார், சென்னையின் எந்தெந்த பகுதிகளில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன என்பது குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



