கோவை கல்லூரி மாணவர் அடித்துக் கொலை: 5 பேர் கைது; போலீஸ், கல்லூரி நிர்வாகம் விளக்கம்
கோவை அருகே கல்லூரி மாணவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது சக மாணவர்கள் 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் சிலரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கான காரணம் தொடர்பாக போலீஸ் மற்றும் கல்லூரி நிர்வாகம் தனித்தனியாக விளக்கம் அளித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வள்ளலார் வீதியைச் சேர்ந்த கென்னடியின் மகன் அமுதன் (19). கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்த அவர், கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். பின்னர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால், ஒத்தக்கால் மண்டபத்தில் தனியாக அறை எடுத்து தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி அமுதனும் அவரது நண்பர் ஸ்ரீமன் (19) என்பவரும் கல்லூரி அருகே நடந்து சென்றபோது, கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்த ஒரு கும்பல் அமுதனை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர், அதிகாலை நேரத்தில் அவரது அறைக்குள் நுழைந்து, செல்போனை பறித்துச் சென்றது தொடர்பாக கேள்வி எழுப்பி அமுதனை சரமாரியாக தாக்கியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அமுதனுக்கு அன்றைய தினம் மதிய நேரத்தில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், அதைத்தொடர்ந்து அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. தகவலறிந்த செட்டிபாளையம் போலீஸார், மாணவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர்.
விசாரணையின் அடிப்படையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகாவைச் சேர்ந்த ஆராமுதன் (20), சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த அரவிந்த் (21), திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தைச் சேர்ந்த சிவரோகித் (20), பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தைச் சேர்ந்த மணிபாலு (20) மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை போலீஸார் ஆகஸ்ட் 12-ம் தேதி கைது செய்தனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட போலீஸ் உயரதிகாரிகள் கூறுகையில், கல்லூரியில் அமுதன் தரப்பினருக்கும் சீனியர் மாணவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டதாக தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக, கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி அதிகாலை அமுதன் உள்ளிட்ட 6 பேர் கல்லூரியில் படிக்கும் தீபக் என்பவரது அறைக்குள் சென்று அவரை தாக்கி செல்போனை பறித்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து, அதே நாளில் அமுதனை எதிர்தரப்பினர் பிடித்து, செல்போன் பறித்த சம்பவம் குறித்து விசாரித்து தாக்கியதாகவும், அந்த தாக்குதலிலேயே அவர் உயிரிழந்ததாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும், மொத்தம் 14 பேர் வரை கைது செய்யப்படலாம் என்றும் அவர்கள் கூறினர். இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும், அமுதன் போதைப்பொருள் தொடர்பான தகவலை போலீஸாரிடம் தெரிவித்ததால் அவரை தாக்கியதாக பரவி வரும் தகவல்களில் உண்மை இல்லை என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தின் பின்னணி குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதனிடையே, கல்லூரி முதல்வர் ஜே. ஜெயா கூறுகையில், கடந்த ஜூலை 11-ம் தேதி இரவு தாமதமாக விடுதிக்கு வந்தது தொடர்பாக கேள்வி எழுப்பியபோது, அமுதன் மற்றும் அஜீஸ் ஆகிய இருவரும் விடுதி சமையலரை தாக்கியதாக தெரிவித்தார். இதையடுத்து கல்லூரி ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியதாகவும், மாணவர்கள் தங்களது தவறை ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து இரு மாணவர்களின் பெற்றோர்களும் நேரில் அழைக்கப்பட்டு, அவர்களின் பிள்ளைகள் செய்த தவறுக்கு மன்னிப்புக் கடிதம் பெறப்பட்டதாகவும், பின்னர் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் முதல்வர் தெரிவித்தார். மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஆகஸ்ட் 11-ம் தேதி நேரில் வந்து கல்லூரி நிர்வாகத்தை சந்திக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
மாணவர் அமுதன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸார் மூலமாகவே கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்ததாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், அமுதன் போதைப்பொருள் பயன்பாடு குறித்து தகவல் தெரிவித்ததால் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் தகவலில் உண்மை இல்லை என்றும் கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



