ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 11 வரை தமிழகம் முழுவதும் 1,577 ரவுடிகள் கைது
குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் போலீஸார் மேற்கொண்ட சிறப்பு அதிரடி நடவடிக்கையில், சட்டம்-ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக இருந்ததாக அடையாளம் காணப்பட்ட 1,577 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சைபர் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் போலீஸார் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, குற்றங்களை முன்கூட்டியே தடுக்கும் வகையில் ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் மீதான கண்காணிப்பை டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் தீவிரப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து, கடந்த ஜூலை 29-ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் சிறப்பு கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் நடைபெற்றன. இந்த நடவடிக்கையில் ரவுடிகள் மற்றும் பல்வேறு குற்றப் பின்னணி கொண்டவர்கள் என மொத்தம் 52,279 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட 1,577 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதே காலகட்டத்தில், பிணையில் வெளிவர முடியாத வகையில் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணைகளை நிறைவேற்றவும் போலீஸார் சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில், ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என 3,288 பேர் மீதான பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிலுவையில் உள்ள பிணையில் வெளிவர முடியாத பிடியாணைகளை நிறைவேற்றுவதுடன், தலைமறைவாக இருக்கும் ரவுடிகளை கண்டறிந்து கைது செய்யவும் போலீஸார் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மாநகர காவல் ஆணையாளர்கள், மாவட்ட எஸ்.பி.க்கள் மற்றும் சிறப்பு பிரிவு அதிகாரிகள், ரவுடிகள் மற்றும் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
வழக்கமான சோதனைகள், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தீவிர கண்காணிப்பு மூலமாக குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுத்து, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலீஸாரின் தொடர் நடவடிக்கைகளால் ரவுடிகள் மீதான கண்காணிப்பு வலுப்பெற்றுள்ளதுடன், நிலுவையில் இருந்த பிடியாணைகளும் அதிக அளவில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சட்டம்-ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களை இலக்காகக் கொண்டு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் போலீஸாரின் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



