சென்னை | முந்திச் செல்வதில் ஏற்பட்ட தகராறு: அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; இருவர் கைது
சென்னையில் பேருந்தை முந்திச் செல்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை தாக்கியதாக இருவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மாநகர அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருபவர் மாதவன் (26). இவர் நேற்று மதியம் தடம் எண் 28பி அரசு பேருந்தை எழும்பூரில் இருந்து எண்ணூர் நோக்கி இயக்கிச் சென்றார்.
அந்த பேருந்து சிந்தாதிரிப்பேட்டை ஏ-1 பார்சல் அலுவலகம் அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த ஒரு இருசக்கர வாகனம் பேருந்தை முந்திச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது பேருந்து ஓட்டுநர் வழிவிடாமல் சென்றதாகவும், சில மீட்டர் தூரத்துக்கு பின்னர் இருசக்கர வாகனம் பேருந்தை முந்திச் சென்றதாகவும் தெரிகிறது.
இதையடுத்து பேருந்து ஓட்டுநர் மாதவன் தொடர்ந்து ஹாரன் அடித்துக் கொண்டே சென்றதாக கூறப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் ஆத்திரமடைந்து பேருந்தை நிறுத்தி, “எதற்காக ஹாரன் அடித்தாய்?” என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் ஏற்பட்ட மோதலில், பேருந்து ஓட்டுநர் மாதவனை அவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதை தடுக்க முயன்ற நடத்துநர் சத்யாவையும் தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஓட்டுநர் மாதவன் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சேப்பாக்கம் லாசல் தெருவைச் சேர்ந்த லிங்கன் (43), சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த நந்தகுமார் (52) ஆகிய இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.



