கோவை வடக்குத் தொகுதியில் திமுகவினர் வீதி வீதியாகப் பணப்பட்டுவாடா: எதிர்க்கட்சிகள் அதிரடி சாலை மறியல்!
கோவையில் தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திமுகவினர் வீதி வீதியாகவும், வீடுகளுக்குச் சென்றும் வெளிப்படையாகப் பணப்பட்டுவாடா செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களான கரூரைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர், கோவை வடக்குத் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டு வாக்காளர்களுக்குப் பணத்தை வாரி வழங்கி வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இந்தப் பணப்பட்டுவாடாவைத் தடுக்க முயன்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினருக்கும், வெளிமாவட்ட திமுகவினருக்கும் இடையே ஆங்காங்கே மோதல்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம் மற்றும் புலியகுளம் பகுதிகளில் பணத்தை விநியோகித்த திமுகவினரை பாஜக மற்றும் அதிமுகவினர் கையும் களவுமாகப் பிடித்தனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் கைகலப்பாக மாறியதை அடுத்து, எதிர்க்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து கோவை தெற்கு தொகுதி வேட்பாளர், தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் விரிவான புகார் மனுவை அளித்துள்ளார். இந்த மோதல் மற்றும் பணப்பட்டுவாடா புகார்களால் கோவையில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.




